Monday, June 9, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 17

வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!

2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், மாவட்டத்தில் 102387பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன், 108வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

40 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 1450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டன.

நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முழங்காவில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேரூந்து இன்றைய தினம் (05.05.2025) காலை 08.30 மணிக்கு புறப்பட்டுச்சென்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.S.முரளிதரன் அவர்களும், உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.வே. சிவராசா அவர்களும் இதன்போது இணைந்து அனுப்பிவைத்தனர்.

தொடர்ச்சியாக ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கான பேரூந்துகளை அனுப்பும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

8 வேட்பாளர்கள் கைது!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று (04) காலை 6 மணிமுதல் இன்று (05) காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. 

குறித்த காலப்பகுதியில் 204 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். 

இதற்கிடையில், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 46 ஆகும்.

ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி!

0

ஆஸ்திரேலியாவில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இதையடுத்து, ஆன்டனி அல்பனீஸ் மீண்டும் பிரதமராக உள்ளார். பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவில், பார்லிமென்ட் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

மொத்தம் 150 தொகுதிகளுக்கான தேர்தலில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தலைமையில்ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் கடும்போட்டி நிலவியது.

ஏராளமானோர் ஆர்வத்துடன் ஓட்டளித்த நிலையில், பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், ஆளுங்கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி, சொற்ப இடங்களையே கைப்பற்றியது.

இதன் வாயிலாக, ஆஸ்திரேலிய பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆன்டனி அல்பனீஸ் பதவியேற்க உள்ளார். இது, அந்நாட்டில் 21 ஆண்டுகளுக்குபின் நடைபெறும் நிகழ்வாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, ஆதரவாளர்களிடையே ஆன்டனி அல்பனீஸ் பேசுகையில், ”நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.

”நாங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை. நம் உத்வேகத்தை வெளியே தேடவேண்டியதில்லை; நம் மக்களிடமே அதை காணலாம்,” என்றார்.

பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்ற ஆன்டனி அல்பனீசுக்கு, நம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த தயார்!

0

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளது என, மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். 

சூரியனின் செய்திப் பணிப்பாளர் பரமேஷ்வரன் விக்னேஷ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டார். 

எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படாமையினால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சட்டச் சிக்கல் காணப்படுகிறது. 

பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

எனவே, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படுமாயின், எந்த நேரத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான முழுமையான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையகத்தின் மிக முக்கிய அறிவிப்பு!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது. 

அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். 

339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுநாள் காலை 7.00 மணிக்கு தொடங்க உள்ளதுடன், 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 75,589 என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். 

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைந்த இன்றுடன் தொடங்கும் அமைதி காலத்தில் சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அமைதி காலத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகள் அல்லது கட்அவுட்களை யாராவது காட்சிப்படுத்தியிருந்தால், அவை அகற்றப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 65,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வியட்நாம் பறந்த ஜனாதிபதி அனுர!

0

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். 

ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. 

நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங், இன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் நோங் தி ஹா, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டம் மற்றும் வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் வரவேற்றனர். 

இலங்கை ஜனாதிபதியின் வருகை, இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தருவதுடன், விரிவான இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, பிராந்தியத்திலும் உலகிலும் அமைதி, ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் என்று வியட்நாம் தூதுவர் அந்நாட்டு ஊடகங்களுக்குத் கருத்து தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு அமோக ஆதரவு!

0

வடகிழக்கிற்கு வெளியிலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமோக ஆதரவு!

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

இலங்கை வரலாற்றில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது. கிழக்கு மாகாணத்தில் இக்கட்சி உதயமானாலும் முதல் முதலாக அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெற்றது மாகாண சபைத்தேர்தல் மூலமாக வடகிழக்கிற்கு வெளியேயுள்ள மாகாணங்களில் தான்.

அரசியல் சூழ்நிலைக்கேற்ப தேர்தல்கள் வருகின்ற போது பெரும்பாலும் வடகிழக்கிற்கு வெளியில் தாங்கள் கூட்டணி அமைத்திருக்கும் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தங்களுக்குச் சாதகமான பிரதேசங்களில் போட்டியிட்டு வந்தார்கள்.

அவ்வப்போது வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் தேவை நிமித்தம் தனித்தும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கட்சி என்பதனால் நாடு தழுவியதாக ஆதரவாளர்கள் இருக்கத்தக்கதாக அதற்கேற்ப முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலும் அந்தந்தப்பிரதேசங்களுக்கான பிரதிநிதிகளுக்கும் இடம்கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டமையினால் தேசியப்பட்டியலினூடாகவும் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தமை ஒரு உற்சாகத்தை கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் இடதுசாரி ஆட்சி தோற்றுவிக்கப்பட்டாலும், ஆட்சியாளர்கள் மீது மக்களின் நம்பிக்கை தளர்ந்து கொண்டு செல்வதை ஆட்சியாளர்களின் சில செயற்பாடுகள் காரணமாக அமைந்திருக்கிறது என்பதைக்காண முடிகின்றது.

இச்சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலுருந்து கொண்டு மக்களின் பலமான குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் உடபட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதைக் காண முடிகிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஆதரவும் பெருகி வரும் சூழலில் தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை நாடு எதிர்நோக்கியிருக்கிறது.

தற்போதைய உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் முறையில் பெரும்பாலும் சபைகளை தனிக்கட்சி ஆட்சியமைப்பது கடினமாக இருப்பதால் கூட்டாட்சி முறையே அதிகம் சாத்தியப்படுவதை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கண்டுகொண்டோம்.

தேசிய அரசியலில் தேசிய கட்சிகளோடு கூட்டாக இருந்தாலும் குறித்த தேர்தலில் தனித்துக்கேட்கும் போது கட்சிகள் ஆசனங்களைப் பெற்று ஆட்சியில் பங்காளர்களாகும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் இம்முறை பல கட்சிகள் தனித்து தங்களின் சொந்தச் சின்னங்களில் போட்டியிடுவதைக் காணலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தளவில் வடகிழக்கில் மரச்சின்னத்திலும், வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் மரச்சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்திலும் இணைந்தும் போட்டியிடுகிறது.

வடகிழக்கிற்கு வெளியில் நீண்டகாலத்தின் பின்னர் மரச்சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதால் கொழும்பு, கண்டி, கம்பஹா போன்ற பல இடங்களில் அமோக வரவேற்பை மரம் பெற்று வருவதை தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் காண முடிகின்றது.

சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் கலந்து கொள்ளும் நோக்கில் கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மக்களால் ஆமோக வரவேற்பளிக்கப்படுவதைக் காண முடிகின்றது.

இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் பல இடங்களில் ஆட்சியமைக்கவும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.

தேர்தலின் பின்னரான சூழல் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமானதாக அமையுமென்பதை தேர்தல் கால முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.

தற்போதைய அரசாங்கத்தின் முஸ்லிம் சமூகம் தொடர்பான போக்கு, எதிர்கால சவால்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் சமூகமும் தங்களுக்கான தனித்துவக்கட்சி தொடர்பில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளதைக் காண முடிவதோடு, தேசிய மக்கள் சக்தியின் அலையில் அள்ளுண்டு போனவர்கள் தற்போது சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

பலரும் தற்போது முஸ்லிம் காங்கிரஸை நோக்கி வருவதையும், அதன் வேட்பாளர்களை ஆதரிப்பதையும் காண முடிகிறது.

குறிப்பாக, இளைஞர்கள் அநுர அலையில் அள்ளுண்டாலும் தற்போதைய சூழ்நிலையில் தங்களது பிரதேசங்களுக்கு தேசிய மக்கள் சக்தி பொருத்தமான வேட்பாளர்களை அடையாளப்படுத்தவில்லை என்பதனால் அதிர்ப்தியடைந்து தங்களது ஆதரவை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி வருவதையும் காணலாம்.

நமக்காய் பேசுவதற்கும் ஒரு கட்சி தேவை என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமை ரவூப் ஹக்கீமும் அடையாளம் பெறுகிறார்கள்.

நிதி ஒதுக்காமல் இருக்க இதென்ன வாப்பாட பணமா?

உள்ளூராட்சிமன்ற தேர்தல், புத்தளம் பிரதேச சபை, பொத்துவில்லு வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று புத்தளம் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது.

பொத்துவில்லு வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் ஜனாப் லரீப் காசிம் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசியத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் உட்சாக வரவேற்புக்கு மத்தியில் வரவேற்கப்பட்டு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

குறித்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தலைவர் ஹக்கீம்,

வன்னி மண்ணின் மறைந்த மாமனிதர் மர்ஹூம் நூர்தீன் மஷூர் அவர்களின் காலம்தொட்டு இன்று வரை முஸ்லீம் காங்கிரஸ் மீது அதிக அன்பு கொண்டவர்கள் இந்த மண்ணின் பெண்கள்தான் என்று பெருமிதம் கொண்டார்.

மேலும் இந்த கட்சிக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இந்த கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏனைய பகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி, கெளரவப்படுத்தி, அழைத்து விருந்து வழங்கியதும் புத்தளம் எருக்கலம்பிட்டி கட்சி போராளிகள்தான் என்று நினைவு கூறினார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை கொண்ட கட்சிகள் எல்லாம் இன்று அடையாளம் தெரியாமல் போயிருந்தும், இந்த கட்சி முன்னைய தேர்தலில் பெற்றுக்கொண்ட அதே ஆசன எண்ணிக்கையை போன்று மீண்டும் பெற்று இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்கு கட்சியின் போராளிகள்தான் காரணம் என்று கட்சியின் தொண்டர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி பேசினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஹக்கீம்,

புத்தளம் எருக்கலம்பிட்டியில் தீராத பிரச்சினையாக உள்ள வடிகான் வேலைத்திட்டத்தை இந்த அரசின் மூலம் பெற்று தருவதற்கு முயற்சி எடுப்பதாகவும், முடியாமல் போனால் வெளிநாட்டு முதலீடுகள் மூலமாவது பெற்றுத்தருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் உள்ளூராட்சி மன்றங்களை ஆளும் கட்சி வென்றெடுக்காமல் போனால், தோல்வியடைந்த குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை கடுமையாக எதிர்த்து பேசிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவ்வாறு நிதி ஒதுக்காமல் இருக்க இது என்ன ஜனாதிபதியின் தகப்பனின் பணமா என கேள்வி எழுப்பினார்.

ஆளும் கட்சி இவ்வாறான முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆளும் தரப்பினர் தற்போது பயத்தினால் இதுபோன்ற விடயங்களை கூறி வாக்கு சேகரிக்கின்ற விடயத்தில் இறங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

குறித்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் பிரதேச சபைக்கான வேட்பாளர்கள், நாகவில்லு கிளை கட்சி போராளிகள், அபிமானிகள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்க விடுமுறை இல்லையா?

0

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக தேர்தல் சட்டத்தின் விதிகளின்படி விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு நிறுவனத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (02) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவது அவசியமானது என தெரிவித்தார்.

அரச அதிகாரிகளுக்கு, வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தூரத்தைப் பொறுத்து, நிறுவனத் தலைவர் தீர்மானிக்கும் போதுமான கால அவகாசத்துடன், குறைந்தபட்சம் 2 மணி நேர விடுமுறை வழங்குவது அவசியம் என தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தனியார் துறைக்கு விடுமுறை வழங்குவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்களிப்பு நிலையத்திற்கு 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அரை நாள், 40 முதல் 100 கிலோமீட்டர் வரை இருந்தால் ஒரு நாள், 100 முதல் 150 கிலோமீட்டர் வரை இருந்தால் ஒன்றரை நாள், 150 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சில வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தூரத்தைப் பொறுத்து இதற்கு மேல் கூடுதல் நாட்கள் விடுமுறை தேவைப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

இதற்கிடையில், உள்ளாட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நாளை (03) நள்ளிரவு முதல் முடிவுக்கு வரும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மே 03 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதிக் காலமாக கருதப்படுகிறது.

தற்போது, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், தமது பிரதேசத்தில் உள்ள உப தபால் அலுவலகத்திற்கு சென்று அந்த அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.