உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று தங்கள் பணியிடங்களில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், 25 மற்றும் 28 ஆம் திகதிகளிலும் இதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இதுவரை சுமார் 90 சதவீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழு இவ்வாறு நாட்டுக்கு வருகை தருகிறது.
இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இன்று 28 முதல் மே மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் பல தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் 2.7 பில்லியன் யூரோக்கள் ஏற்றுமதியுடன், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக மாறியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை விடுவிக்குமா அரசாங்கம்? – சிறீதரன் எம்.பி கேள்வி..!!
போர்க்காலம், சமாதான காலம் என்ற நிலைமாறுதல்கள் எல்லாவற்றையும் கடந்து, கல்வி, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களை சமநிலையில் மேலுயர்த்திய விடுதலைப் புலிகளின் காலத்தில், கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இருந்த ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை இராணுவத்திடமிருந்து விடுவித்து, மீள இயக்குவதற்கு இந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்குமா? என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று முன்தினம், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் வன்னேரிக்குளம் வட்டாரக் கிளைத் தலைவர் தியாகராசா செந்தூரன் தலைமையில் ஆனைவிழுந்தானில் நடைபெற்ற கூட்டத்தில், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் வன்னேரிக்குளம் வட்டார வேட்பாளருமான நாகேந்திரம் செல்வநாயகம், குறித்த வட்டார வேட்பாளரான சிவலிங்கம் பிறின்ஸ் சிந்துஜன், போதகர் சிவலிங்கம் சாம்சன், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன், அக்கராயன் வட்டார வேட்பாளர் தட்சிணாமூர்த்தி முரளி ஆகியோர் உரையாற்றியிருந்ததுடன், பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 23 அன்று கல்பிட்டி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 751 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது,
இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி கல்பிட்டி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த 751 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 முதல் 25 வயதுக்குட்பட்ட தலைமன்னார் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டதுன், சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
அலரி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம் எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
நேற்று (26-04-2025) கிளிநொச்சி விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கிளிநொச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
தொடர்ந்து உரையாற்றுகையில்,
அனைத்து மக்களும் சமனான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த அரசாங்கம் அமைந்துள்ளது.
இந்தப் பகுதிகளில் முப்பது வருடமாக யுத்தம் இடம்பெற்றது, இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள், பல கிராமங்கள் இழக்கப்பட்டன, பலர் குழந்தைகளை இழந்தார்கள், தங்களுடைய உறவுகளை இழந்தார்கள், வீடுகளை சொத்துக்களை இழந்தார்கள்,
நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஊழலற்ற ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். கடந்த காலங்களிலே பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாம்களுக்காக எடுத்திருக்கின்றார்கள். நாங்கள் இப்போது அந்த காணிகள் தொடர்பில் இராணுவ தலைவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றோம். விடுவிக்க கூடிய அனைத்து இடங்களையும் மீண்டும் மக்களுக்காக வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
அது மட்டுமல்ல பாரம்பரியமாக பயிர் செய்து வந்த நிலங்கள் கூகுள் வரைபடத்தின்படி வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் மக்களுடைய நிலங்கள் அவற்றை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
ஆகவே இன்னும் சில பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன. கொழும்பிலே மூடி இருந்த பாதைகளை திறந்து இருக்கின்றோம். குறிப்பாக அலரி மாளிகைக்கு முன்பாக இருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும்? அனைத்து பாதைகளையும் இந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலே நாங்கள் திறந்து விடுவோம்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மூடிய பாதைகளை திறந்து விட்டிருக்கின்றோம். நாட்டை சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும். வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க இருக்கின்றோம். ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு நிதிகளை விடுவிக்க இருக்கின்றோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல், புத்தளம் பிரதேசபக்கான பொத்துவில்லு வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீத் இன்று புத்தளம் பொலிஸாரினால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.
119 போலீஸ் அவரச பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீத் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.
இன்றைய தேர்தல் பிரச்சாரங்களுக்காக வாகனத்தில் ஒலிபெருக்கியினை பயன்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்தமையினால், மக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தினார் என்ற அடிப்படையில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்தே குறித்த வேட்பாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் வாகனங்களில் ஒலிபெருக்கியினை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது சட்டத்திற்கு முரணான நிலையிலேயே, குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட புத்தளம் போலீசார், மேலதிக விசாரணையின் பின்னர் குறித்த வேட்பாளர் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (27) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று (26) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் அளவிற்கு எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என்று அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இந்த பரீட்சைக்கு மொத்தமாக 274,361 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 222,774 பாடசாலை பரீட்சாத்திகளும் அடங்குவர்.
அதன்படி, 177,588 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 149,964 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 27,624 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.
அத்துடன், பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்களை மே மாதம் முதலாம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
நாட்டு மக்களின் பால் தேவையை பூர்த்தி செயும் நோக்கிலும், புதிய உற்பத்திகள் பலவற்றை நுகரும் மக்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் 500 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி மில்கோ உற்பத்திக்கான 500 விற்பனை நிலையங்களை (அவுட்லெட்) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய திட்டத்திற்கு இணங்க முதல் 50 விற்பனை நிலையங்கள் மே மாதத்தில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான பிரதேச அபிவிருத்தி வாங்கி (RDB) நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் போது புதிய தொழில் முயற்சியாளர்களுக்காக அவசியமான கடன் வசதிகளை வழங்குவதற்கு பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB) முன்வந்துள்ளது.