Friday, February 7, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 21

மிக மோசமான கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!

0

துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது; விபத்தில் அஜித்திற்கு காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் இந்த இரண்டு படங்களின் டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துள்ளார். இதற்கு இடையில் அஜித், கார் ரேஸிங் அணி ஒன்றை தொடங்கி ,இம்மாதம் துபாயில் நடைபெற இருக்கும் கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அவர், 15 வருடங்கள் கழித்து ரேஸிங்கில் கலந்து கொள்ள இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதற்காக தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் அஜித்குமார்.

சமீபத்தில் தான் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய அஜித், உடனடியாக துபாய் புறப்பட்டு சென்றார்.

அங்கு, கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்த கார், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கார் விபத்தில் அஜித்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

பா.உ ஹர்ஷ.த சில்வா தலைமையில் நிதிக்குழு கூட்டம்!

0

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்று (06) கூடியது.

நிலையியற் கட்டளைகளுக்கு அமைய எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக, தெரிவுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

குழுவின் தலைவர் என்ற ரீதியில் இங்கு கருத்துத் தெரிவித்த அவர், குழுவின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்ததுடன், அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து குழுவின் உறுப்பினர்கள் மற்றும் வருகை தந்திருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் “மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024” மற்றும் அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் பற்றி விளக்கமளித்தனர். இதன் பின்னர் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024இற்கு குழு அனுமதி வழங்கியது.

எல்.எம்.டி சஞ்சிகையினால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் “வருடத்தின் சிறந்த இலங்கையர்” எனப் பெயரிடப்பட்டமை குறித்து குழு பாராட்டைத் தெரிவித்ததுடன், பொருளாதார மீட்சிக்கு அதிகாரிகள் எடுத்த முயற்சிகளையும் அங்கீகரித்தது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பணித்திட்டம் குறித்து கவனம் செலுத்திய அரசாங்க நிதி பற்றிய குழு, தேவை ஏற்படும் பட்சத்தில் குழுவினால் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்பதன் அடிப்படையில் இதற்கு அங்கீகாரம் வழங்கியது.

குழுவின் உறுப்பினர்களான, பிரதி அமைச்சர்களான கௌரவ ஹர்ஷன சூரியப்பெரும, கௌரவ சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவி கருணாநாயக்க, கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, கௌரவ அக்ரம் இலியாஸ், கௌரவ நிமல் பலிஹேன, கௌரவ விஜேசிறி பஸ்நாயக்க, கௌரவ திலின சமரக்கோன், கௌரவ லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்!

0

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய நியமனங்களை பெற்ற இராஜதந்திரிகளிடம் இருந்து அவ்வாறானவற்றை எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. இங்கு உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இலங்கைப் பணியாளர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இராஜதந்திர சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பணியை இராஜதந்திர சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவது தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு எனவும், அதற்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 04 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமித்தார்.

இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இவ்வாறு இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,

கத்தார் நாட்டின் தூதுவராக – திருமதி.ஆர்.எஸ்.கான் அசாத்
ரஷ்ய தூதுவராக – திருமதி எஸ்.கே. குணசேகர
குவைத் தூதுவராக – எல்.பி.ரத்நாயக்க
எகிப்திய தூதுவராக – ஏ.எஸ்.கே.செனவிரத்ன
நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக – டபிள்யு.ஜீ.எஸ். பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

ஜப்பான் வழங்கிய உறுதிமொழி. நடக்கவுள்ள திருப்பம்!

0

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின்  (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற சந்திப்பின் போ​தே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. 

ஜப்பான் உதவியில் முன்னெடுக்கப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாக அபிவிருத்தி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா உதவியில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய உதவி மற்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு  தேவையான நிதி உதவிகளை வழங்க ஜயிக்கா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் ஹாரா சொஹெய் மேலும் தெரிவித்தார். 

இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் முன்னணி வேலைத்திட்டமான “Clean Sri Lanka” திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த சிரேஷ்ட உப தலைவர், அந்த வேலைத்திட்டத்திற்கு அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நகர தூய்மையாக்கல் பணிகளுக்கு ஜயிக்கா நிறுவனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிதி மற்றும் பௌதீக உதவிகள்  தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

சீனாவில் பாரிய நிலநடுக்கம். 53 பேர் பலி!

0

சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன.

அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை.

திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது

நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டடங்கள் இடிந்து விழும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியாகியுள்ளன.சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீனா சீன ஊடகமான சிசிடிவியிடம், “ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்” என்று கூறினார்.5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், “பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது”என்று ஜியாங் கூறினார்.நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது.அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது.

“அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை” என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார்.

”ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை” என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா.

” பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.

தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், “இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.” என்றார்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதும் புவியியல் பிழைக் கோடுக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகளுக்கு உள்ளாகிறது.

2015ம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

பதவி விலகவுள்ள கனேடிய பிரதமர் ட்ரூடோ?

0

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்றோ அல்லது நாளையோ பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டிலும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார். ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி எம்.பி.,க்களே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இவர் மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ட்ரூடோவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். மேலும்,ட்ரூடோவின் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த என்.டி.பி., கட்சியும் ஆதரவை விலக்கி கொண்டது. மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, , லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்று விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், வரும் 8ம் தேதி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடுகிறது. அதற்குள் அவர் பதவி விலக இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில் அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது!

0

பெங்களூருவில் இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி., தொற்று உறுதியான நிலையில், மாநிலத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு அறிகுறி இருந்தால் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; பரவும் அபாயத்தைக் குறைக்க நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூருவில், எட்டு மாத ஆண் குழந்தையும், மூன்று மாத பெண் குழந்தையும் எச்.எம்.பி.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள், வெளிநாடு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு, பீதி அடைய வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தும் அதே வேளையில், எச்.எம்.பி.வி., ஒரு புதிய வைரஸ் அல்ல என்றும், உலகளவில் மற்றும் நாட்டிற்குள்ளும் ஏற்கனவே இருப்பது தான் என்றும் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் எச்.எம்.பி.வி., கண்டறியப்பட்ட இரு குழந்தைகளில், மூன்று மாத குழந்தை ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், எட்டு மாத குழந்தை குணமடைந்து வருகிறது.

இந்த நோய் பாதிப்புக்கு அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம் மற்றும் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், விரைவான சுவாசம், வியர்வை மற்றும் குளிர், தலைவலி, தசை வலி, சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பரவிவரும் சீனாவின் புதிய வைரஸ்!

0

சீனாவில் (China) பரவி வரும் ஹுயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று தற்போது முதன் முறையாக இந்தியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

ஹுயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

இன்று இந்தியாவில் சீனாவின் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பெங்களூருவில் பதிவாகியுள்ளது. 8 மாத குழந்தைக்கு முதலில் வைரஸ் தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மற்றொரு 3 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் எச்.எம்.பி.வி., பாதிப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அவரகளது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ல உயிர்களை காவு கொண்ட கோவிட் தொற்றை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் தலைமையகமே பொலிஸில் முறைப்பாடு!

0

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சி.சி.டி.வி கெமராக்கள் காணாமல் போயுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம், கோட்டை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளது.

தற்போது, ​​பொலிஸ் தலைமையகம் கொம்பனி வீதியில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தை அந்த இடத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் இந்த சிசிடிவி கெமராக்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பழைய பொலிஸ் தலைமையகத்தின் 5வது மாடியில் இந்த சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவற்றின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்த அரசின் அறிவிப்பு!

0

வட சீனாவில், குறிப்பாக குழந்தைகளிடையே சுவாச நோய்களின் அதிகரிப்பைக் குறிக்கும் சமூக ஊடக அறிக்கைகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பதால், உண்மையான உண்மைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

காய்ச்சல், சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) போன்ற பொதுவான வைரஸ்களால் இந்த வழக்குகள் ஏற்படுகின்றன என்பதை சீன சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். முக்கியமாக, புதிய அல்லது அசாதாரண நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்த நிலைமை எதிர்பாராதது அல்ல என்றும், மற்ற நாடுகளில் காணப்பட்ட முறைகளைப் போன்றது என்றும் WHO கூறியுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட தற்போதைய அலை தீவிரமானது என்றும் மருத்துவமனைகள் நோயாளிகளின் சுமையை திறம்பட நிர்வகித்து வருவதாகவும் சீன அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.

இலங்கையில், இந்த நிலை குறித்து கவலை கொள்ள எந்த காரணமும் இல்லை. எங்கள் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர் மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முக்கிய குறிப்புக்கள்:-

சீனாவில் சுவாச நோய்களின் அதிகரிப்பு அறியப்பட்ட வைரஸ்கள் காரணமாகும்.

புதிய அல்லது அசாதாரண நோய்க்கிருமிகள் அடையாளம் காணப்படவில்லை.

தற்போதைய சூழ்நிலை நடவடிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை மற்றும் இந்த கட்டத்தில் இலங்கையில் பொது சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.