Friday, February 7, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 22

அரசியலமைப்பு குறித்து திடீரென வாய்திறந்த கொழும்பு பேராயர்!

0

ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம்.

இதை யார் செய்தார்கள், எந்த நோக்கத்திற்காக, யாருடைய உதவியோடு செய்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டமை, போன்ற பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தேவையான பொறிமுறையை தயார் செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

அதற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள சில பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

சீனாவின் புதிய வைரஸ் தொற்றில் கோவிட் 19 அறிகுறிகள்!

0

இந்த உலகம் மிகவும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தற்போது, சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இந்த புதிய வகை வைரஸ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன.

“இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட்-19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது” என்று ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி மானிட்டரிங் பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இந்த நோயாளிகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன.

சீனாவில் பரவி வரும் இந்த புதிய வைரஸ் மக்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக கவலைகள் எழுந்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொரொனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

சீனாவின் அரசுசார் செய்தித் தளமான குளோபல் டைம்ஸ் கூற்றுப்படி, வட சீனா, பெய்ஜிங், தென்மேற்கு நகரமான சோங்கிங் மற்றும் தென் சீனாவிலுள்ள குவாங்டாங் மாகாணம் போன்ற பகுதிகளில் இந்த HMPV வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பர் 27ஆம் தேதி ராய்ட்டர்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், குளிர்காலத்தில் சுவாசப் பிரச்னைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சீனாவின் சுகாதார நிறுவனங்கள் புதிதாக ஒரு நோய் கண்காணிப்பு அமைப்பைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டன.

இந்த கண்காணிப்பு முறை குறித்துப் பேசிய சீனாவின் தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் தலைவர் லி ஜென்லாங், இதன் மூலம் அறியப்படாத காரணங்களால் ஏற்படும் நிமோனியா பாதிப்புகள் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

சீனாவில் சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மிகவும் அதிகரித்து இருப்பதாக சீன அரசு அறிக்கையைச் சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கைப்படி, ரைனோவைரஸ் மற்றும் இந்த HMPV வைரஸ் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சீனாவின் வடக்குப் பகுதியில்தான் பெரும்பாலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் எங்கிருந்து உருவாகிறது என்பது பற்றி எந்தத் தகவலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கு முன்பு, சீனாவில் பரவி வந்த இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பிற சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் குறித்து இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

“மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிவது, சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் வித்யாவதி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் என்று இந்தோனீசியாவின் செய்தி நிறுவனமான அந்தாரா தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு பறவைகளில் தோன்றியது என்றும், அதன் பிறகு இந்த வைரஸ் சூழலுக்கேற்ப மீண்டும் மீண்டும் தன்னைத் தகவமைத்துக் கொண்டதாகவும் இப்போது இந்த வைரஸ் பறவைகளைப் பாதிக்காது என்றும் சயின்ஸ் டைரக்ட் என்ற ஆய்வுக்கட்டுரைகளுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடந்த 2001ஆம் ஆண்டு மனிதர்கள் மத்தியில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதுதான் இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கும் என்று கண்டறியப்பட்டது” என்று அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கலாம். இதன் காரணமாக, நோயாளிக்கு காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

நோய் பாதிப்பு அதிகரித்தால், இந்த வைரஸால் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

இந்த வைரஸ் பொதுவாக மூன்று முதல் ஆறு நாட்கள் உயிருடன் இருக்கும். தொற்று எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்து குறைந்த அல்லது அதிக நாட்களுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம்.

அரச சேவை வெற்றிடங்கள் குறித்த அறிவிப்பு!

0

விவசாயத் துறையுடன் தொடர்புடைய அரச சேவை வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு, விவசாயிகள் உட்பட விவசாயத் துறை தொழில்முனைவோருக்கு உயரிய சேவை வழங்கப்படும் என்றும் விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்தார். 

விசேடமாக அரசாங்கத்துடன் தொடர்புடைய, கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றதனால், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அண்மையில் கண்டியில் இடம்பெற்ற விவசாயத் துறை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்..

விவசாயிகளைப் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். அதற்காக அரசாங்கம் எப்போதும் பாடுபடும். அத்துடன், இலங்கையின் விவசாயத் துறை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

காலத்துக்குக் காலம் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தாலும் இந்நாட்டு மக்கள் பட்டினியில் வாடாமல் இருக்க விவசாயிகள் பாடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், குறைபாடுகள் காணப்பட்டாலும் விவசாயத்துறை அதிகாரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், விவசாயத் துறையுடன் தொடர்புடைய இந்த வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும், நெல் சந்தைப்படுத்தல் சபை போன்ற நிறுவனங்கள் மீண்டும் செயற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் நிலை!

0

மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்வு

பயன்பாடின்றி சேதமடைந்து வரும் மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்வதற்காக வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த பொருளாதார மத்திய நிலையத்தை இங்கு ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து, மதவாச்சி பிரதேச செயலாளர் சந்திரிகா மலேவியாராச்சி அமைச்சருக்கு விளக்கமளித்தார்

இதில் மதவாச்சி பாரளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவத்தன்ன அவர்களும் கலந்துகொண்டார்.

இந்த ஜனாதிபதியுமா நாட்டை விட்டு ஓடப்போகிறார்?

0

வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உயிருக்கு பயந்து இந்தியா சென்று தஞ்சமடைந்தார்.

அதன்பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறார்.

ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி அவரது ஆட்சியை கவிழ்த்தனர். அதன்பிறகு மாணவர்கள் தான் புதிய ஆட்சியை அமைப்பதாக கூறினர். ஆனால் அனுபவசாலி வேண்டும் என்ற நிலையில் முகமது யூனுஷ் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு அவரது தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.

ஆனால் அவரது அரசில் இடம்பெற்றுள்ள போராட்டக்குழுவினரின் தலையாய நோக்கம் என்பது வங்கதேசத்தின் அரசியலமைப்பை மாற்றம் செய்வதுதான். அதாவது வங்கதேசத்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு அதற்கு பதில் Revolutinary government அமைப்பதாகும். இதனை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது யூனுஷ்க்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதோடு கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் முகமது யூனுஷ் இதனை நிறைவேற்றவில்லை. இதையடுத்து மீண்டும் 15 நாட்கள் அதாவது ஜனவரி 15ம் தேதிக்குள் தற்போதைய அரசியலமைப்பை நீக்கி புதிய விதிகளுடன் ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளனர்.

ஆனால் முகமது யூனுஷ் அதனை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் வெடிக்கலாம். அதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா போல் முகமது யூனுஷ் நாட்டில் இருந்து விரட்டப்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை சொக்கவைத்த மோடி!

0

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கிய ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரமானது வெளிநாட்டு தலைவர்கள் வழங்கியதிலேயே அதிக விலை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் முக்கிய தலைவர்கள் கடந்த 2023ம் ஆண்டு பெற்ற பரிசு பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி கடந்த 2023ம் ஆண்டு அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு 20ஆயிரம் டாலர் சுமார் ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரத்தை பரிசாக வழங்கியுள்ளார். ஜில் பைடன் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்றதிலேயே பிரதமர் மோடி வழங்கியது தான் அதிக விலை உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் தூதர் 4510 டாலர் ( ரூ.3.8லட்சம்) மதிப்புள்ள பிரேஸ்லெட், ப்ரூச், புகைப்பட ஆல்பத்தை அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வழங்கியுள்ளார்.

அதிபர் ஜோ பைடனும் விலைமதிப்பு மிக்க பல்வேறு பரிசு பொருட்களை வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்றுள்ளார். சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய அதிபரின் யூன் சுக் இயோலிடம் இருந்து 7100 டாலர் மதிப்புள்ள நினைவு புகைப்பட ஆல்பம், மங்கோலிய பிரதமரிடம் இருந்து 3,495டாலர் மதிப்புள்ள மங்கோலிய வீரர்களின் சிலை, வெள்ளிக் கிண்ணம் உட்பட பல்வேறு விலையுயர்ந்த பரிசு பொருட்களை அதிபர் பெற்றுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் முக்கிய கண்காட்சி!

0

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்பு

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை (EDB) என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் FACETS Sri Lanka சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி இன்று முதல் (06) திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசியாவின் முதன்மை இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka இம்முறை 31 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சீனா,இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

கல்பிட்டியில் சிக்கிய கிலோ கணக்கு தங்கம்!

0

கற்பிட்டி – பத்தலண்குண்டுவ கடற்பகுதியில் 11 கிலோ 300 கிராம் நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 28 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். 

கற்பிட்டி – பத்தலண்குண்டுவ கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான டிங்கி இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர்.

இதன்போதே, குறித்த இயந்திர படகில் தங்கம் கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. குறித்த தங்கத்தை பறிமுதல் செய்த கடற்படையினர், அந்த இயந்திர படகில் பயணித்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், குறித்த தங்கம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இயந்திர படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

ஒரு வருசத்துல இத்தனை பேரையா நாய் கடிக்கணும்!

0

ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாக பொது சுகாதார கால்நடை வைத்திய சேவை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மனித விசர்நாய்க்கடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார கால்நடை சுகாதார சேவையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார்.

இதில் 11 பேர் விசர்நாய்கடியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கலவத்தான் கடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள 8 இறப்புகளில், விலங்கு தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.

இவ்வாறு, நடுத்தர வயதுடையவர்கள் அதிகமாக விலங்கு கடிக்கு உள்ளாவதாகவும்,  அவர்களில் 2 பேரில் ஒருவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாய்க்கடி அதிகமாகப் பதிவாகியிருந்தாலும், கடந்த பத்து வருடங்களில் படிப்படியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், குரங்கு கடி அதிகரித்துள்ளது.

மனித ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக வருடாந்தம் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்தார்.

சில இடங்களில் இன்று பலத்த மழைவீழ்ச்சி!

0

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.