முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 11,000 சிறு அளவு மீன் வளர்ப்புக் குடும்பங்களை வலுவூட்டும் பிராந்திய ‘AquaLivelihood’ திட்டம் ஆரம்பம்.
தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய “AquaLivelihood” திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து நேற்று (05) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
“நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தியின் மூலம் சார்க் பிராந்தியத்தில் உள்ள சிறு அளவு மீன் வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புற மக்களின் போசாக்குப் பாதுகாப்பை உறுதிசெய்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக 3.97 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள 120,000க்கும் அதிகமான கிராமியக் குடும்பங்கள் இதன் மூலம் நேரடிப் பயனடைவார்கள்.
இத்திட்டத்தின் கீழ், இலங்கையில் சுமார் 11,000 கிராமிய மீன் வளர்ப்புக் குடும்பங்கள் நேரடிப் பயனடையவுள்ளதுடன், இதற்காக 586,224 அமெரிக்க டொலர்கள் (சுமார் 175 மில்லியன் இலங்கை ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் பிரதான தேசிய நிறுவனமாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) செயற்படுகின்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்:
“இன்று நாம் ஆரம்பிப்பது வெறுமனே ஒரு திட்டத்தை அல்ல, ஒரு பயணத்தை. ஆயிரக்கணக்கான சிறிய மீன் வளர்ப்பாளர்களுக்கு உதவும், கிராமப்புறக் குடும்பங்களின் போசாக்கையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும், நமது பிராந்தியத்தில் உறுதியான பங்காளித்துவத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பயணம். இத்திட்டத்தின் பயனாளிகளில் குறைந்தபட்சம் 30% பெண்களாக இருப்பது இதன் மிக அழகான அம்சமாகும். இது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல, அபிவிருத்தியின் ஒவ்வொரு படியிலும் பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும் என்ற செய்தியாகும். பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, சார்க் அபிவிருத்தி நிதியத்தின் மூலம் நாடுகள் ஒன்றிணைந்து, அறிவைப் பகிர்ந்துகொண்டு செயல்பட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இந்தத் திட்டம் இலங்கைக்கும் முழுமையான தெற்காசியாவிற்கும் ஒரு பெரும் வெற்றியைத் தரும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.”
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள்:
“இந்தத் திட்டத்தின் மூலம், ஆய்வுக்கும் உற்பத்தியாளரின் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, இலங்கையில் நிலவும் மீன் குஞ்சுகளின் பற்றாக்குறைக்குத் தீர்வாக, சமூகத்தால் நிர்வகிக்கப்படும் பரவலாக்கப்பட்ட இனப்பெருக்கப் பிரிவுகளை நிறுவுவதும் இதன் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும். பெண்களை உதவியாளர்களாக மட்டுமன்றி, தீர்மானம் எடுப்பவர்களாகவும், உற்பத்தியாளர்களாகவும், தொழில் முயற்சியாளர்களாகவும் வலுவூட்டுவதன் மூலம், நாம் குடும்பங்களையும் சமூகங்களையும் கட்டியெழுப்ப முடியும். இந்தத் திட்டம், அரசாங்கம், ஆய்வாளர்கள், தனியார் துறை மற்றும் விவசாய சமூகத்தை ஒன்றிணைத்த, பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய மாதிரியாகும். இதுவே இத்திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யும்.”
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், கித்சிறி தர்மப்பிரிய அவர்கள்:
“நமது நாடுகளில் நன்னீர் மீன்வளர்ப்பில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளான தரமான மீன் குஞ்சுகளின் தட்டுப்பாடு மற்றும் மீன் தீவனத்திற்கான அதிக செலவு ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதே இதன் பிரதான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலான மீன் தீவனத்தை உற்பத்தி செய்யவும், இலங்கையின் எட்டு மாவட்டங்களில் மீன் குஞ்சுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கைக்கு இன்னும் தேவைப்படும் சுமார் 300,000 மெட்ரிக் தொன் மீன் அறுவடையை கடலில் இருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு நன்னீர் மீன்வளர்ப்பை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் 800-900 குடும்பங்கள் நேரடியாக வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். அத்தோடு 30,000க்கும் அதிகமானோருக்கு மறைமுகப் நன்மைகளும் கிடைக்கும்.”
இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள BYD மின்சார கார்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மேலதிக சமர்ப்பணங்களை உறுதி செய்வதற்காக இந்த மாதம் 7 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன் அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பர்சானா ஜமீல், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த வாகனங்களை தடுத்து வைக்க சுங்கம் எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த வாகனங்களை வங்கி பிணைப்பத்திரங்களுக்கு அமைய சுங்கத்திற்கு விடுவிக்க முடியும் என அவர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.
இதன்போது இலங்கை சுங்கம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன சமர்ப்பணங்களை முன்வைத்து, இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட 997 வாகனங்கள் சுங்கத்தின் பொறுப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வாகனங்களின் மோட்டார் திறன் 100 கிலோவாட்டா? அல்லது 150 கிலோவாட்டா? என்பதை முடிவு செய்ய மொரட்டுவை மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரண்டு நிபுணத்துவமிக்க பேராசிரியர்கள் மற்றும் BYD-யின் இரண்டு பொறியாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த அறிக்கை கிடைக்கும் வரை குறித்த வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய வரிகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கணக்கிட்டு, அந்தத் தொகையை சுங்க பணிப்பாளர் கணக்கில் வைப்புத்தொகையாக வைப்பு செய்தால், அந்த வாகனங்களில் 06 வாகனங்களை விசாரணைக்காகத் தக்கவைத்துக் கொண்டு, மீதமுள்ள வாகனங்களை விடுவிக்கலாம் என்றும் பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
இந்த சமர்ப்பணங்களின் பின்னர் குறித்த மனுவை இந்த மாதம் 7 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நீதியரசர்கள் அமர்வு, இந்த முன்மொழிவு குறித்து மனுதார் தரப்பின் நிலைப்பாட்டை அன்றைய தினம் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டனர்.
இந்த மனு, ஜோன் கீல்ஸ் சிடி ஒட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார்.
இதன்படி குறித்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர், அதாவது 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் இந்த பதவி நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பிறகு, ஜனாதிபதி, அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை பரிந்துரைப்பார்.
பலபோகங்களாக பயிர்ச்செய்கைக்கு உட்படாது காணப்பட்ட கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரிக்கு சொந்தமான வயலில் நடுகை செய்யப்பட்ட வயலின் அறுவடை விழா பாடசாலையின் முதல்வர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இயந்திரம் மூலம் நாற்று நடுகை செய்யப்பட்ட வயலின் குறித்த அறுவடை நிகழ்வில் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.
கல்லூரிக்கு சொந்தமான வயலில் நெல் நடுகை செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்படும் இந்நிகழ்வு முழு நாட்டுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நடவடிக்கையானது மாணவர்கள் மத்தியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை வேரூண்டச்செய்வதாகவும், நாட்டில் நெல் உற்பத்தியில் தண்நிறைவான ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், புலிங்க தேவன் கமக்காரர் அமைப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த வயல் நாற்று நடுகை முதல் அறுவடை வரையான அணைத்து நடவடிக்கைகளுக்கும் முரசுமோட்டை புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பினர் அனுசரனையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பசுமை புரட்சியின் முன்னோடி; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சவூதி அரேபியாவின் மிகப்பெரும் முன்னேற்றம்.!
எஸ். சினீஸ் கான்
பசுமை என்பது ஒரு தேசத்தின் எதிர்காலம் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டும் நாட்டாக இன்று சவூதி அரேபியா உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. Vision 2030 என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ், சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் Saudi Green Initiative (SGI) சுற்றுச்சூழல் திட்டம் எதிர்காலத்தில் அதீக நன்மைகளை பெற்றுத்தரக்கூடியதாகும்.
இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 151 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் நட்டுப் பசுமையை பரப்பியுள்ளன. இது வெறும் மரநடுகை அல்ல. இது ஒரு உயிர்மூச்சாக, பசுமை எதிர்காலத்தின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ஒரு வறண்ட நிலத்தில் இந்த அளவுக்கான பசுமை வளர்ப்பு என்பது சவூதி அரேபியாவின் அதீத நம்பிக்கையையும், தலைமைத்துவ திறமையையும் காட்டும் நேரடி சான்றாகும்.
மேலும், 500,000 ஹெக்டேர் நிலம் மீண்டும் உயிர்த்தெழச் செய்யப்பட்டுள்ளதுடன், காலநிலை மாற்றம், மணல் மற்றும் தூசி புயல்களுக்கு எதிரான 5 முக்கிய சுற்றுச்சூழல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கில் முதல் முறையாகவே நடைபெறுகின்ற பெரும் நிகழ்வாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் மிகவும் வியக்கத்தக்கது:
இவை அனைத்தும் சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல் மீதான உண்மையான அக்கறையின் வெளிப்பாடுகளாக உள்ளன. எண்ணெய் வளத்தில் மட்டுமே நம்பியிருந்த ஒரு நாட்டின் இப்படி ஒரு பசுமை மாற்றம், உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக அமைகிறது.
இளவரசர் முகம்மத் பின் சல்மானின் தலைமை வழிகாட்டுதலின் கீழ், சவூதி அரேபியா ஒரு புதிய பரிமாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுமையான பசுமை திட்டங்கள், மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்நாட்டின் முயற்சிகள், வருங்கால தலைமுறைகளுக்கே ஒரு பரிசாக அமையும்.
மெய்நிகர் நகரத்தை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தின் (Virtual city creation project) முன்னோடிக் கருத்திட்டமாக யுனெஸ்கோ உலக மரபுரிமையாக இருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ தலதா மாளிகை உள்ளிட்ட கண்டி நகரம் Virtual city in Kandy எனும் பெயரில் நிர்மாணிப்பதற்காக அடையாளங் காணப்பட்டுள்ளது.
குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தின் முதலாவது பகுதியாக கண்டி நகரத்தை மையமாகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலும் மற்றும் சுற்றுலாத்துறை ஆற்றல் வளங்களுடன் கூடிய இடங்களாக முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
அந்த வகையில் 58 இடங்கள் முதல் கட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்திட்டத்தின் இரண்டாவது பகுதியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ தலதா மாளிகை வளாகம் மற்றும் அதனை அண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுமான 20 இடங்களை தொழிநுட்ப ரீதியாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உற்பத்தி நிறுவனங்களுக்குள்ள ஆற்றல் வளங்கள் மற்றும் துரித இயலுமைகள் தொடர்பாகவும், குறித்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முற்கூட்டிய உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் மதிப்பீடு செய்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சால் குறித்த கருமங்களுக்காக ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் பொருத்தமானதென விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய Clean Srilanka கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் மூலம் Virtual city in Kandy கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி எல்லைகளைத் திருத்தம் செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பாராளுமன்ற உயர்ந்தபட்ச உறுப்பினர் ஒருவருக்கு வருடமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய்கள் முறையை காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் கூட்டுக் காப்புறுதி நடைமுறைப்படுத்துவதற்கு 2023.05.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த காலப்பகுதியில் குறித்த காப்புறுதிக் காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கின்ற போது ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற ரூபாய் 1,000,000/- காப்புறுதிக் காப்பீட்டு எல்லையை ரூபாய் 250,000/- ஆகக் குறைப்பதற்கு முன்மொழிந்துள்ளார்.
அதற்கமைய, 2025.10.19 ஆம் திகதி ஆரம்பிக்கின்ற காப்புறுதி ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான காப்புறுதிக் காப்பீட்டு அனுகூலத்தை ரூபாய் 250,000/- ஆக மட்டுப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்புறுதிக் காப்பீட்டை வழங்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது படையினருக்கு உத்தரவிடவுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து தீவிர ஆர்வத்துடன் உள்ளதாலும்,பேச்சுவார்த்தைகளிற்கு முன்னர் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துவருவதாலும்,காசாவில் யுத்த நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முட்டுகட்டைநிலைக்குள் சிக்குண்டுள்ளன.
இன்று செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு உத்தரவிடுவார் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.
தீர்மாமொன்றை எடுத்துள்ளேன், அதிலிருந்து பின்வாங்க முடியாது,காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கப்போகின்றோம்,முப்படைகளின் பிரதானி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர் பதவி விலகவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்தார் என அவருக்கு நெருக்கமான சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என இஸ்ரேலின் வைநெட் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் இராணுவஅதிகாரிகள் தரைநடவடிக்கையை விஸ்தரிப்பதை விரும்பவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்தன.
ஹமாஸ் பணயக்கைதிகளை வைத்திருக்கும் பகுதியை நோக்கி தரை நடவடிக்கையில் ஈடுபடுவது பணயக்கைதிகளிற்கும் படையினருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தலாம் என இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.
பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கையை விஸ்தரிக்கவிரும்புகின்றார் என வெளியான தகவல்களை இஸ்ரேலிய படையினரின் தாய்மார் கண்டித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்படவுள்ளன.
இதன்போது பொதுமக்கள் குறித்த சான்றுப் பொருட்களைப் பார்வையிட்டு அது பற்றிய தகவல்கள் தெரிந்திருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கோ, நீதிமன்றுக்கோ குறிப்பிட முடியும்.
இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி சான்றுப்பொருள்களைப் பார்வையிடுவது தொடர்பான ஒழுங்கு விதிகள் பற்றி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி கட்டளை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1.இது ஒரு நீதிமன்றச் செயல்முறை என்பதனால், அந்நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் நீதிமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் கண்ணியத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.
2. காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
3. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.
4. இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
5. பங்குபற்றும் நபர்கள், மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.
6. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.
7. பங்குபற்றும் நபர்கள், காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது.
8. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.