அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை “ஒரே இரவில் அழித்துவிடுவோம்” (Taken out in one night) என்று விடுத்துள்ள எச்சரிக்கை மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாக திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் செவ்வாய்க்கிழமை இரவு (ஏப்ரல் 7, 2026) ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
“எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. ஈரானின் ஒவ்வொரு பாலமும், மின்சார நிலையமும் எரியும், வெடிக்கும்; அவை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த முடியாதபடி அழிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த மிரட்டலை “மனநோயாளித்தனமானது” (Delusional) என்று ஈரான் ராணுவம் சாடியுள்ளது. ஈரானின் சிவில் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலாக அமெரிக்காவிற்குச் சொந்தமான தளங்கள் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது “உலகம் பார்த்திராத மிகக் கடுமையான பதிலடி” கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்குவது “போர்க்குற்றம்” என்று சர்வதேச சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஈரானின் ஐக்கிய நாடுகள் சபை தூதரகம், இது பயங்கரவாதத்தைத் தூண்டும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்து வருவதாகவும், இது ஒரு தேசியப் பேரழிவாக உருவெடுத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, விபத்துக்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தரவுகளை வெளியிட்டார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில்:
மரண விபத்துக்களின் எண்ணிக்கை 74 ஆல் அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆல் அதிகரித்துள்ளது.
விபத்துக்களுக்கான முக்கிய காரணங்கள்
விபத்துக்கள் அதிகரிப்பதற்குப் பின்வரும் நான்கு காரணங்கள் பிரதானமாக அடையாளம் காணப்பட்டுள்ளன:
வீதிகளின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள்.
சாரதிகளின் கவனக்குறைவான வாகனம் செலுத்தல்.
அளவுக்கு அதிகமான வேகம் (Over-speeding).
மதுபோதையில் வாகனம் செலுத்துதல்.
வீதி விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் அதிகமானோர் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி:
230 பாதசாரிகள் வீதியைக் கடக்கும்போது அல்லது நடந்து செல்லும்போது உயிரிழந்துள்ளனர்.
247 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்துக்களில் சிக்கி பலியாகியுள்ளனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக கருத்துத் தெரிவிக்கையில்,
“வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்களே. இது நாட்டின் மனிதவளத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்,” என கவலை வெளியிட்டார்.
வீதி விதிகளை மதித்து நடப்பதன் மூலமும், மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துவதன் மூலமும் மட்டுமே இத்தகைய அநியாய மரணங்களைத் தடுக்க முடியும் எனப் பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கரையோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கேசந்துறை முதல் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இதேவேளை நாட்டைச் சூழவுள்ள அனைத்துக் கடற்பரப்புகளிலும் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசும்.
பொதுவாக காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும். இருப்பினும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் மழை காரணமாக புத்தளம் முதல் பொத்துவில் வரையான (காலி, கொழும்பு ஊடாக) கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அல்லது மிதமான அலையுடன் அமைதியாகக் காணப்படும் அதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், அந்தப் பகுதிகளில் காற்று பலமாக வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள், குறிப்பாக மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய நெருக்கடி நிலைமையின் போது எரிபொருள் இருப்பைச் சேமிக்கும் நோக்கில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரச ஊழியர்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து கடந்த மார்ச் 17ஆம் திகதி அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம், உலகளாவிய வர்த்தக மற்றும் எரிசக்தி சந்தைகளில் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சூழலில் ஈரான் ஏற்கனவே ஹார்மூஸ் நீரிணையை மொத்தமாக கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தற்போது அடுத்தாக ஒரு முக்கிய வழித்தடத்தை முடக்க உள்ளதாக எச்சரித்துள்ளது. அதுதான் Bab al-Mandab Strait, இது உலக வரைபடத்தில் சிறியதாகத் தோன்றினாலும், உலக பொருளாதாரத்தில் இந்த நீரிணை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
ஈரான் இந்த பாப் அல் மண்டப் பாதையை முடக்கினால் சவுதி அரேபியாவின் வர்த்தகம், பொருளாதாரம், வருமானம் என அனைத்தும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல் ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கும் அபாயம் இந்த வழித்தடத்திக்கு உள்ளது.
அமெரிக்காவின் எரிசக்தித் தகவல் நிர்வாகத்தின் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் தினமும் சுமார் 4.1 மில்லியன் பேரல் பெட்ரோலியம் பொருட்கள் இந்த நீரிணை வழியாக சென்றுள்ளது. இது ஹார்மூஸ் வழியாக செல்லும் 20 மில்லியன் பேரலுடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது எப்படி?
இது ஹார்மூஸ் வழித்தடம் முடங்கும் போது எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று பாதையாகவும் பாப் அல் மண்டப் நீரிணை செயல்படுகிறது. சவுதி அரேபியாவின் Yanbu துறைமுகத்திற்கு தினமும் சுமார் 7 மில்லியன் பேரல் எண்ணெய் குழாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து, அது செங்கடல் வழியாக பாப் அல்-மண்டப் நீரிணையை கடந்து உலக சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது இது முடக்கப்பட்டால் சவுதியின் பெரும்பகுதி வர்த்தகம் முடங்கும்.
மத்திய கிழக்கின் எரிசக்தி பொருளாதாரத்தில், சவுதி அரேபியா மிக முக்கியமான நாடாக உள்ளது. இந்த நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய கடல் வழித்தடங்களில் ஒன்றாக பாப் அல் மண்டப் நீரிணை திகழ்கிறது.
குறிப்பாக ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தினமும் மில்லியன் கணக்கான பேரல் எண்ணெய் இந்த வழியாக அனுப்பப்படுகிறது. இதனால், இந்த நீரிணையின் பாதுகாப்பு சவுதி பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய விஷயமாகும். ஹார்மூஸ் நீரிணை பாதையில் பதற்றம் அல்லது தடைகள் உருவானால், பாப் அல்-மண்டப் நீரிணை முக்கிய மாற்று பாதையாக சவுதி அரேபியாவுக்கு செயல்படுகிறது. சவுதி அரேபியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கு எண்ணெய் குழாய்கள் மூலம் கொண்டு எரிவாயு, கச்சா எண்ணெய் செல்லப்பட்டு, அங்கிருந்து செங்கடலில் இந்த நீரிணை வழியாக உலக சந்தைகளுக்கு சவுதி அரேபியா ஏற்றுமதி செய்து வருகிறது.
இதனால், ஹார்முஸ் பாதை பாதிக்கப்பட்டாலும், சவுதி தனது ஏற்றுமதியை தொடரும் வாய்ப்பு பாப் அல் மண்டப் நீரிணை தந்தது. ஆனால் தற்போது ஈரான் ஹார்மூஸ் மற்றும் பாப் அல் மண்டெப் ஆகிய இரு முக்கிய கடல் வழித்தடங்களும் ஒரே நேரத்தில் முடக்கும் காரணத்தால், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்பை உருவாக்கும்.
கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல், உலகளாவிய சரக்கு வர்த்தகத்திலும் பாப் அல் மண்டப் நீரிணை முக்கிய பங்கு வகிக்கிறது. சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே பயணிக்கும் கப்பல்கள், இந்த நீரிணையை கடக்கின்றன. இதனால், உலக வர்த்தகத்தின் சுமார் 12% சரக்கு போக்குவரத்து இந்த பாதையை சார்ந்துள்ளது. இந்த வழித்தடம் பாதிக்கப்பட்டால், அதன் தாக்கம் மத்திய கிழக்கை மட்டுமல்லாது, உலகம் முழுவதும் எதிரொலிக்கும்.
பாப் அல்-மண்டப் நீரிணையுடன் ஈரான் எந்த வகையிலும் நேரடியாக கடற்கரை இணைப்பு இல்லாத போதிலும், ஈரான் இந்த பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதற்கு காரணம், ஈரானுக்கு பக்கபலமாக இருக்கும் யெமன் நாட்டில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு. இந்த ஹவுதி அமைப்பு, கடந்த 2023-2024 காலகட்டத்தில் செங்கடலில் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தியுள்ளது. தற்போது ஈரானுக்கு ஆதரவமாக, இஸ்ரேல் ராணுவ இலக்குகளையும் தாக்க தொடங்கியுள்ளது. இதனால், ஈரான்-யெமன் கூட்டணி எந்த நேரத்திலும் பாப் அல்-மண்டப் நீரிணையை கைப்பபற்றி முடக்க கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. பாப் அல்-மண்டப் நீரிணை முடக்கப்பட்டால் சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுக்கு நடக்கும் அனைத்து வர்த்தகமும் பாதிக்கப்படும்.
ஏற்கனவே ஹார்மூஸ் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகளை ஒரு போரலுக்கு 110 டாலர் வரையில் உயர்ந்துள்ளன. அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு 4 டாலரை கடந்துள்ளது. மேலும் ஜேபி மோர்கன் சேஸ் ஆய்வாளர்கள், இந்த நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலர் வரை உயரக்கூடும் என கணித்துள்ளனர். மேலும் குறுகிய காலத்தில் $120-$130 இடையே நிலைத்திருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.
பாப் அல்-மண்டப் நீரிணையும் பாதிக்கப்பட்டால், இந்த விலை மேலும் அதிகரித்து 200 டாலரை கூட தாண்டும் அபாயம் இருப்பதாக முன்பு எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஹூதி அமைப்பு பாப் அல்-மண்டப் நீரிணையில் கப்பல்களை நேரடியாக தாக்கவில்லை. இருப்பினும், நிலைமை வேகமாக மாறக்கூடியதாக இருப்பதால், உலக சந்தைகள் தொடர்ந்து கவனத்தில் வைத்துள்ளன. இதுக்குறித்து ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா கமேனி-யின் ஆலோசகரான அலி அக்பர் விலாயதி போட்ட டிவீட் தான் தற்போது பதற்றத்திற்கு முக்கியமான காரணமாக விளங்குகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைந்து செயற்படும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தின் மூலம் பின்வருமாறு விளக்கினார்:
“நானும் ஒரு பெண்ணும் காதலிப்பதாக வைத்துக் கொள்வோம். தந்தை அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறோம். பின்னர் தந்தை நோய்வாய்ப்படும்போது, அவரைப் பார்ப்பதற்காக எமது தாய் வீட்டிற்கு வருகிறோம். அங்கே எம்மால் தங்கியிருக்க முடியும் அல்லவா?” என அவர் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியே தங்களின் ஆரம்ப வீடு என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
வலதுசாரி அரசியல் கலாசாரத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை எனத் தெரிவித்த அவர், நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
“மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறான நிலையில், அவர்களுடன் எம்மால் எவ்வாறு கூட்டணி அமைக்க முடியும்?”
நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பாதிப்புக்குள்ளாக்கிய தரப்பினரைத் தவிர்த்து, தமது அரசியல் கொள்கையுடன் ஒத்துப்போகும் தரப்புடன் மாத்திரமே இணைந்து பயணிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்தார்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேர் உச்சியில் சூரியன் நிலைபெறுகின்றது.
அதன்படி, இன்று (06) நண்பகல் 12:13 மணியளவில் பேருவளை, குருலுபெத்த, ரக்வானை, கொடகவெலை, உடவலவை மற்றும் தனமல்வில ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பமான காலநிலை என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதோடு, அதிகளவில் நீரை அருந்துவது உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாவெவ குளத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கான புதிய வசதி நேற்று (05) மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த ஆரம்ப விழாவில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக மற்றும் நாத்தாண்டியா பிரதேச சபையின் தலைவர் சாகர விஜேசேகர உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நாத்தாண்டியா பிரதேச சபை, மகாவெவ பிரதேச செயலகம் மற்றும் மகாவெவ உற்பத்தி சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள மகாவெவ குளம், ‘தனியவல்லப’ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 169 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தக் குளம், காலங்காலமாக விவசாய நடவடிக்கைகளுக்கும் நன்னீர் மீன்பிடித் தொழிலுக்கும் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
கடந்த காலங்களில் ‘ஜப்பான் ஜபர’ உள்ளிட்ட தேவையற்ற நீர்த் தாவரங்களால் சூழப்பட்டிருந்த இந்தக் குளம், சமீபத்தில் பிரதேச மக்களின் பெரும் முயற்சியால் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குளத்தை மையமாகக் கொண்ட ஒரு சுற்றுலாத் திட்டத்தை முன்னெடுக்க மகாவெவ பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், பயணிகள் தனித்தனியாகவோ அல்லது குழுக்களாகவோ படகு சவாரி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாத்தாண்டியா பிரதேச சபையின் நேரடிப் மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இப்படகு சேவையை, எதிர்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
புதிய சுற்றுலா படகுச் சேவையின் ஆரம்பத்தை முன்னிட்டு, அப்பகுதி மீனவர்களுக்கு இடையிலான பாரம்பரிய ‘தெப்பம்’ வலிக்கும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த புதிய முயற்சியானது பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவ அதிகாரி பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உலகப்போருக்கான சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த மோதலில், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கி 6 வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மார்ச் 26ம் தேதியன்று ஈரான் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட இருந்த தாக்குதல்களை, ஏப்ரல் 6ம் தேதி திங்கட்கிழமை வரை (நாளை) நிறுத்தி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரான் அரசின் வேண்டுகோளை ஏற்று, அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அப்போது அவர் கூறியிருந்தார். இதற்காக 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் பாரசீக வளைகுடா பகுதியில் பறந்த அமெரிக்காவின் எப்-15 ஸ்டிரைக் ஈகிள் மற்றும் ஏ-10 தண்டர்போல்ட் ஆகிய 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானின் புஷெர் அணு உலை, எஃகு உற்பத்தி ஆலை மற்றும் முக்கிய பாலங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தின.
குறிப்பாக காரஜ் பகுதியில் உள்ள பி1 பாலத்தை அமெரிக்கா தகர்த்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மையங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த இக்கட்டான சூழலில், ேநற்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர அதிரடி கெடு விதித்தார். அதில், ‘ஹார்முஸ் நீர்சந்தியை மீண்டும் திறக்க ஈரான் உடன்பட வேண்டும், இல்லையெனில் நரகத்தை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் விதிக்கப்பட்ட இந்த கெடுவானது, இலங்கை நேரப்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் முடிவுக்கு வருகிறது.
இந்த காலக்கெடுவுக்குள் ஈரான் பணியவில்லை என்றால் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி, ‘தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அவர்களுக்கு சாதகமாக அமையாது.
அமெரிக்க ராணுவம் வைத்துள்ள இலக்குகள் அனைத்தும் அர்த்தமற்றவை. பாலம் மற்றும் மின் நிலையங்களை தகர்ப்போம் என்ற அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டல், அமெரிக்காவின் விரக்தியையே காட்டுகிறது. எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமையும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானில் உள்ள 8 முக்கிய பாலங்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம். இதில் சவுதி அரேபியா – பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹத் பாலம் மற்றும் குவைத்தின் ஷேக் ஜாபர் அல்-அகமது அல்-சபா பாலம் ஆகியவையும் அடங்கும்’ என்று அவர் கூறினார்.
ஹார்முஸ் நீர்சந்தி முடக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஈரானுடன் சீனா உள்ளிட்ட சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மூலம் வர்த்தகம் செய்ய முயன்றாலும், அந்த ஜலசந்தியை ராணுவ ரீதியாக திறக்க அமெரிக்கா தலைமையிலான 35 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. டிரம்ப் விதித்த கெடு நாளை அதிகாலை முடிய உள்ள நிலையில், ஈரான் தரப்பில் கூறப்படும் பெரிய அதிர்ச்சி என்னவாக இருக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் பைத்தியக்காரத்தனத்தை எவராலும் தடுக்க முடியாதா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரான முகமது எல்பாரடே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அரபு மொழியில், ‘இந்த பைத்தியக்காரர் (டிரம்ப்) இப்பகுதியை நெருப்புப் பந்தாக மாற்றுவதற்கு முன்பாக, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து போரைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று வளைகுடா நாட்டுத் தலைவர்களிடம் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உலக நாடுகளின் அமைப்பிற்கு அவர் விடுத்துள்ள மற்றொரு செய்தியில், ‘இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த யாராலும் ஒன்றும் செய்ய முடியாதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் ராணுவ தளபதிகள் பலி;
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா நடத்திய பிரம்மாண்ட வான்வழித் தாக்குதலில், அந்நாட்டு ராணுவத்தின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இருள் சூழ்ந்த பகுதியில் போர் விமானங்கள் பறக்கும் சத்தமும், மிகப்பெரிய குண்டுகள் வெடிக்கும் சத்தமும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது பதிவில், ‘ஈரான் நாட்டை தவறான பாதையில் வழிநடத்திச் சென்ற அந்த நாட்டு ராணுவத் தலைவர்கள் பலர், டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட தாக்குதலில் அதிரடியாக கொல்லப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து இன்னும் பல முக்கிய இலக்குகளும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதலின் தொழில்நுட்ப விவரங்கள் குறித்தோ அல்லது பலியானவர்களின் எண்ணிக்கை குறித்தோ அமெரிக்க தரப்பில் விரிவான விளக்கம் இன்னும் அளிக்கப்படவில்லை.