Sunday, June 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 32

டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு நாளை அதிகாலையுடன் முடிகிறது! 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவ அதிகாரி பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உலகப்போருக்கான சூழலை உருவாக்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த மோதலில், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கி 6 வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மார்ச் 26ம் தேதியன்று ஈரான் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட இருந்த தாக்குதல்களை, ஏப்ரல் 6ம் தேதி திங்கட்கிழமை வரை (நாளை) நிறுத்தி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

ஈரான் அரசின் வேண்டுகோளை ஏற்று, அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அப்போது அவர் கூறியிருந்தார். இதற்காக 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் பாரசீக வளைகுடா பகுதியில் பறந்த அமெரிக்காவின் எப்-15 ஸ்டிரைக் ஈகிள் மற்றும் ஏ-10 தண்டர்போல்ட் ஆகிய 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானின் புஷெர் அணு உலை, எஃகு உற்பத்தி ஆலை மற்றும் முக்கிய பாலங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தின.

குறிப்பாக காரஜ் பகுதியில் உள்ள பி1 பாலத்தை அமெரிக்கா தகர்த்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மையங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த இக்கட்டான சூழலில், ேநற்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர அதிரடி கெடு விதித்தார். அதில், ‘ஹார்முஸ் நீர்சந்தியை மீண்டும் திறக்க ஈரான் உடன்பட வேண்டும், இல்லையெனில் நரகத்தை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.

அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் விதிக்கப்பட்ட இந்த கெடுவானது, இலங்கை நேரப்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் முடிவுக்கு வருகிறது.

இந்த காலக்கெடுவுக்குள் ஈரான் பணியவில்லை என்றால் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி, ‘தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அவர்களுக்கு சாதகமாக அமையாது.

அமெரிக்க ராணுவம் வைத்துள்ள இலக்குகள் அனைத்தும் அர்த்தமற்றவை. பாலம் மற்றும் மின் நிலையங்களை தகர்ப்போம் என்ற அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டல், அமெரிக்காவின் விரக்தியையே காட்டுகிறது. எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமையும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானில் உள்ள 8 முக்கிய பாலங்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம். இதில் சவுதி அரேபியா – பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹத் பாலம் மற்றும் குவைத்தின் ஷேக் ஜாபர் அல்-அகமது அல்-சபா பாலம் ஆகியவையும் அடங்கும்’ என்று அவர் கூறினார்.

ஹார்முஸ் நீர்சந்தி முடக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஈரானுடன் சீனா உள்ளிட்ட சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மூலம் வர்த்தகம் செய்ய முயன்றாலும், அந்த ஜலசந்தியை ராணுவ ரீதியாக திறக்க அமெரிக்கா தலைமையிலான 35 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. டிரம்ப் விதித்த கெடு நாளை அதிகாலை முடிய உள்ள நிலையில், ஈரான் தரப்பில் கூறப்படும் பெரிய அதிர்ச்சி என்னவாக இருக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் பைத்தியக்காரத்தனத்தை எவராலும் தடுக்க முடியாதா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரான முகமது எல்பாரடே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அரபு மொழியில், ‘இந்த பைத்தியக்காரர் (டிரம்ப்) இப்பகுதியை நெருப்புப் பந்தாக மாற்றுவதற்கு முன்பாக, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து போரைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று வளைகுடா நாட்டுத் தலைவர்களிடம் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உலக நாடுகளின் அமைப்பிற்கு அவர் விடுத்துள்ள மற்றொரு செய்தியில், ‘இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த யாராலும் ஒன்றும் செய்ய முடியாதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரான் ராணுவ தளபதிகள் பலி;

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா நடத்திய பிரம்மாண்ட வான்வழித் தாக்குதலில், அந்நாட்டு ராணுவத்தின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இருள் சூழ்ந்த பகுதியில் போர் விமானங்கள் பறக்கும் சத்தமும், மிகப்பெரிய குண்டுகள் வெடிக்கும் சத்தமும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது பதிவில், ‘ஈரான் நாட்டை தவறான பாதையில் வழிநடத்திச் சென்ற அந்த நாட்டு ராணுவத் தலைவர்கள் பலர், டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட தாக்குதலில் அதிரடியாக கொல்லப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து இன்னும் பல முக்கிய இலக்குகளும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதலின் தொழில்நுட்ப விவரங்கள் குறித்தோ அல்லது பலியானவர்களின் எண்ணிக்கை குறித்தோ அமெரிக்க தரப்பில் விரிவான விளக்கம் இன்னும் அளிக்கப்படவில்லை.

காட்டு யானைகள் தாக்கியதில் நால்வர் பலி!

0

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

எப்பாவல, கெலேஅமுணுகொலய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன், ஹுரிகஸ்வெவ பகுதியிலும் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, தனமல்வில – ஹம்பேகமுவ பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு காட்டு யானைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேத்தாவாடி ஆக்கிரமிப்புக்கு தவிசாளர் வைத்த முற்றுப்புள்ளி!

கற்பிட்டி, தேத்தாவாடி மீனவ கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பொதுப்பாதை ஆக்கிரமிப்புப் பிரச்சினைக்கு, கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ் அவர்களின் நேரடித் தலையீட்டின் மூலம் சுமூகமான ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

தேத்தாவாடி பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வந்த பாதையை, அப்பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஆக்கிரமிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் பாதிக்கப்படும் நிலை உருவானது.

பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம். முஸம்மில் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ், பிரதித் தவிசாளர் சமன் குமார மற்றும் குழுவினர் தேத்தாவாடி கிராமத்திற்குச் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

அங்கு நிலவிய சூழலை நேரில் ஆராய்ந்த தவிசாளர், அதிரடியாக தனது முடிவுகளை அறிவித்தார்.

பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள பாதையை எந்தவொரு தனியார் நிறுவனமோ அல்லது சுற்றுலா விடுதியோ ஆக்கிரமிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட சுற்றுலா விடுதியின் பொறுப்பதிகாரியை நேரில் அழைத்து எச்சரித்த தவிசாளர், மீனவர்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்கக் கூடாது என கடும் உத்தரவு பிறப்பித்தார்.

பொதுமக்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் எவ்வித தடையுமின்றிச் சுதந்திரமாகப் பாதையைப் பயன்படுத்துவதற்கு முழு உரிமை உண்டு என்பதை அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் தெளிவுபடுத்தினார்

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், தவிசாளர் உடனடியாக நாரா (NARA) நிறுவனத்துடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார். கடலிலிருந்து 10 மீட்டர் வரையான சட்டரீதியான கடல் எல்லையை முறைப்படி அளவீடு செய்து, அந்த எல்லையை உறுதிப்படுத்தும் வகையில் எல்லைக் கூஞ்சிகளை (Boundary Pillars) நாட்டுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போதைய தவிசாளரின் இந்த துரித நடவடிக்கையினால் மீனவ சமூகத்தின் நீண்டகாலப் கவலை நீங்கியுள்ளதுடன் மக்கள் பிரதிநிதிகளின் இந்த அதிரடித் தலையீட்டை தேத்தாவாடி கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

நோயாளிகளின் உயிர்களைப் பணையம் வைக்க வேண்டாம்!

0

உள்ளகப் பயிற்சியைப் பூர்த்தி செய்த வைத்தியர்களுக்குப் நியமனங்கள் வழங்கும் முறைமைக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமானது, எவ்விதமான கலந்துரையாடல்களுக்கும் அடிப்படையற்ற ஒரு செயலாகும் எனச் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், GMOA முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“நியாயமான காரணங்களின் அடிப்படையில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டால், அது குறித்து எம்மால் கலந்துரையாட முடியும். ஆனால், தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டமானது எவ்வித அடிப்படையுமற்றது. இது குறித்துப் பேசுவதற்குக்கூட ஒன்றுமில்லை” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சருடன் உள்ள தனிப்பட்ட மோதல்களுக்காக நோயாளிகளின் உயிர்களைப் பணையம் வைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். “என்னுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் எனக்குச் சவால் விடுங்கள். அதை விடுத்து, நோயாளிகளின் உயிர்களைப் பணையக் கைதிகளாக ஆக்கி அவர்களை இந்தப் பிரச்சினைகளுக்குள் இழுக்க வேண்டாம். அமைச்சருடன் இருக்கும் பிரச்சினைகளைப் பொதுமக்கள் மீது திணிக்க வேண்டாம்” என அவர் வலியுறுத்தினார்.

உள்ளகப் பயிற்சி நியமனங்கள் வழங்கும் முறைமை சட்டவிரோதமானது என GMOA கருதினால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு அமைச்சர் அவர்களுக்குச் சவால் விடுத்தார். “நீங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றால், ஒரு பக்கத்தில் நானும் மறுபக்கத்தில் உங்கள் குழுவினரும் இருந்து சட்ட ரீதியாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தன்னுடன் உள்ள முரண்பாடுகளைத் தீர்க்கச் சட்ட ரீதியான வழிகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்திய அமைச்சர், பொதுமக்களின் சுகாதார சேவையைப் பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆரச்சிகட்டுவ கூட்டுறவுச் சங்க முகாமையாளர் விளக்கமறியலில்!

0

ஜூட் சமந்த

ஆரச்சிகட்டுவ பல்வேறு சேவை கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான முக்கிய ஆவணங்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்தச் சங்கத்தின் பொது முகாமையாளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் நீதவான் கடந்த 4 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

மாதம்பே – புதிய நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 3 ஆம் திகதி கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான நான்கு லெட்ஜர் (Ledger) புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் துமிந்த தர்மவன்ச சுபசிங்க ஆரச்சிகட்டுவ காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.

தலைவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர், சந்தேகநபரைக் கைது செய்ததுடன் அவரிடமிருந்த நான்கு லெட்ஜர் புத்தகங்களையும் மீட்டுள்ளனர். சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

குறித்த கூட்டுறவுச் சங்கத்தின் கடந்த கால நிர்வாகத்தின் போது பல நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாகச் சிலாபம் உதவி கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தினால் தற்போது விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, இந்த ஆவணத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா விசாவில் வந்து டிஜிட்டல் கொள்ளை: சிக்கிய சீனப் பட்டாளம்!

0

ஜூட் சமந்த

சிலாபத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்து இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கருதப்படும் 152 வெளிநாட்டவர்களை ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி எஸ்.டி. அபேரத்ன கடந்த 3 ஆம் திகதி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் 137 பேர் சீன நாட்டவர்கள் ஆவர். ஏனையவர்கள் வியட்நாம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 177 கணினிகள், 577 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு மின்னணு உபகரணங்களை சோதனையிட்ட அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சிலாபம் – இரணவில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்த இந்த வெளிநாட்டவர்கள், இணையதள குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் பிரிவினர் கடந்த 2 ஆம் திகதி மாலை இந்தச் சோதனையை நடத்தினர்.

காவல்துறையினர் சுற்றிவளைத்த போது, விடுதியில் இருந்த சில சந்தேகநபர்கள் தப்பியோட முயற்சித்தனர். இதன்போது காயமடைந்த இரண்டு சீன நாட்டவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா மற்றும் வணிக விசாக்களில் இலங்கைக்கு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களில் சிலரிடம் இலங்கையில் தங்கியிருப்பதற்கான முறையான விசா அனுமதி இருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அந்த விடுதிக்கு நேரில் சென்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உலகெங்கும் உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டம் இன்றாகும்!

0

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும் (05).

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர். 

இயேசு கிறிஸ்து உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் தனது உயிரைத் தியாகம் செய்து, மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததையே கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். 

இயேசுவின் துன்பப்படுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த 40 நாட்கள் தவக்காலமும் இன்றைய உயிர்த்த ஞாயிறு தினத்துடன் நிறைவடைகிறது. 

இதேவேளை தற்போது உலக அமைதி சீர்குலைந்துள்ளதாகவும், உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருவதாகவும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதான திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது புனித பைபிளின் பகுதிகளை வாசிப்பது மாத்திரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

கிறிஸ்தவம் என்பது அன்பு மற்றும் வாழ்வியல் முறையாகும். அன்பு என்பது ஒரு சேவகனாக இருப்பது, கடவுள் முன்னிலையிலும் அண்டை வீட்டார் முன்னிலையிலும் உண்மையாக இருப்பது. ஒரு தலைவன் என்பவன் சேவகனாக இருக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்று உலகை ஆளுபவர்கள் தலைவர்களாக இருக்கிறார்களே தவிர சேவகர்களாக இல்லை. அவர்கள் அதிகாரத்தின் பின்னால் ஓடும் ஆட்சியாளர்களாகவே இருக்கிறார்கள்.” என அங்கு தொடர்ந்து உரையாற்றிய கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

சஜித் கலந்துகொண்டது ‘AI’ அல்ல, உண்மை!

0

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எழுதிய ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி’ நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் கலந்துகொண்டார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (04) உறுதிப்படுத்தினார்.

சஜித் பிரேமதாச இந்த நிகழ்வில் பங்கேற்றது தொடர்பில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட விவகாரம், குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த விவாதங்களையும் சில அரசியல் சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்கங்களின் அணுகுமுறைகளை சஜித் பிரேமதாச தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அதே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கொண்ட உதய கம்மன்பில போன்ற ஒருவரின் நூல் வெளியீட்டில், அதுவும் ராஜபக்ஷக்களுடன் இணைந்து ஒரே மேடையில் அமர்ந்திருந்தது, அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது கட்சிக்குள்ளேயே சஜித்தின் முடிவெடுக்கும் திறன் குறித்த விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை மறுத்திருந்தனர். சஜித் பிரேமதாச அங்கு செல்லவில்லை என்றும், அவர் அங்கு இருப்பது போன்ற காட்சிகள் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என்றும் அவர்கள் வாதிட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முஜிபுர் ரஹ்மான் நேரடியாகப் பதிலளித்தார்.

  • ஊடகவியலாளர்: “எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இடையில் எழுந்து சென்றார் என்று தெரியுமா? “முஜிபுர் ரஹ்மான்: “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.”
  • ஊடகவியலாளர்: “உங்கள் கட்சியின் சில உறுப்பினர்கள் அது ‘AI’ மூலம் செய்யப்பட்டது என்கிறார்கள்.. அவர் கலந்துகொண்டதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்களா? “முஜிபுர் ரஹ்மான்: “ஆம், அவர் கலந்துகொண்டார் என்று பொதுச்செயலாளரே (ரஞ்சித் மத்தும பண்டார) ஏற்கனவே கூறிவிட்டாரே.”

எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ஏன் இவ்வாறானதொரு மேடையில் தோன்றினார் என்பதற்குத் தமது தொகுதி மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சி முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இதனை உறுதிப்படுத்தினாலும், ஆரம்பத்தில் இது ‘AI’ மூலம் செய்யப்பட்டது என கட்சியின் சில உறுப்பினர்கள் கூற முயன்றதே அந்த அச்சத்திற்கு பிரதான காரணமாக உருவெடுத்துள்ளது.

முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகங்கள் சஜித் பிரேமதாசவின் முக்கிய வாக்கு வங்கிகளாக உள்ள நிலையில், ஈஸ்டர் தாக்குதலின் ‘சூத்திரதாரி’ யார் என்பது குறித்த உதய கம்மன்பிலவின் பார்வையும், அந்த மேடையில் இருந்தவர்களின் அரசியல் வரலாறும் இச்சமூகங்களுக்கு உடன்பாடானவை அல்ல. எனவே, இந்த நிகழ்வு சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையைச் சிதைத்து, எதிர்வரும் தேர்தல்களில் அது வாக்குகளாக மாறுவதைத் தடுக்கும் ஒரு காரணியாக அமையலாம் என கட்சி உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர்.

உதய கம்மன்பிலவின் இந்த நூல் வெளியீட்டு விழா அரசியல் ரீதியாகப் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் சஜித் பிரேமதாசவுடன், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் ஒரே மேடையில் காணப்பட்டனர்.

இவர்களுடன் முன்னாள் பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கட்சிக்குள் நிலவிய முரண்பட்ட கருத்துகளுக்கு மத்தியில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரே இதனை உறுதிப்படுத்தியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பாகிஸ்தானில் இலவச பொதுப் போக்குவரத்து அறிமுகம்!

0

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த மாகாணத்தின் முதலமைச்சர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தான் மத்திய அரசு, தலைநகர் இஸ்லாமாபாத்தில் இலவச பொதுப் போக்குவரத்து திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்திலும் இதேபோன்ற சலுகையை முதலமைச்சர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது:

“அரசு வழங்கியுள்ள இந்த வசதிகளை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊக்குவிக்கிறேன். வசதியான, மலிவான மற்றும் நிலையான பயணத்திற்கு பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுங்கள்.”

முன்னதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் பொதுப் போக்குவரத்துச் செலவுகளை மத்திய அரசே ஏற்கும் என்று அறிவித்த சில மணி நேரங்களிலேயே, முதலமைச்சர் மரியம் நவாஸிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பல்வேறு நாடுகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களும், பொதுமக்கள் எரிபொருளைச் சேமிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாக இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்திருந்தன.

இந்த இலவசப் போக்குவரத்துத் திட்டம் பஞ்சாப் மாகாண மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் இம்மாற்றமானது சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரானுடனான வான்வழி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய வான்பரப்பிலும் வளைகுடாப் பகுதியிலும் அமெரிக்காவின் இரு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் இரு விமானிகள் மீட்கப்பட்ட நிலையில், ஒரு வீரர் இன்னும் மாயமாகியுள்ளார்.

அமெரிக்காவின் F-15E ரக ஜெட் விமானம் ஈரானியத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு தாக்குதலில், A-10 வார்தாக் (A-10 Warthog) ரக போர் விமானம் ஈரான் எல்லைக்கு வெளியே குவைத்தில் விழுந்து நொறுங்கியது; அதன் விமானி தப்பித்து மீட்கப்பட்டார். மாயமான F-15E வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பிளாக்ஹாக் (Blackhawk) ஹெலிகாப்டர்கள் மீதும் ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தின, இருப்பினும் அவை தப்பித்துச் சென்றன.

ஈரானிய வான்பரப்பு முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர் கூறி வந்த நிலையில், இந்தச் சம்பவங்கள் அமெரிக்காவிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றன.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, தென்மேற்கு ஈரானில் மாயமான வீரரைத் தீவிரமாகத் தேடி வருகிறது. “பகைமை சக்திகளை” பிடிப்பவர்களுக்கு அல்லது கொல்பவர்களுக்கு சிறப்பு சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு ஆளுநர் அறிவித்துள்ளார். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் இது குறித்துக் கூறுகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நோக்கம் “ஆட்சி மாற்றத்திலிருந்து” தற்போது “விமானிகளைத் தேடும் வேட்டையாக” தரமிறங்கிவிட்டது என்று கிண்டல் செய்துள்ளார்.

பாகிஸ்தான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதில் இருந்து நீடிக்கும் இந்தப் போரில், இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பிராந்தியப் பாதிப்புகள்:

  • குவைத்: ஈரானியத் தாக்குதலால் குவைத்தின் மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்பட்டுள்ளன.
  • லெபனான்: லெபனானில் உள்ள பல்கலைக்கழகங்கள் தாக்கப்படலாம் என்பதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
  • பொருளாதாரம்: போர் முடிவிற்கான அறிகுறிகள் இல்லாததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 11% உயர்ந்துள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல்களால் மத்திய கிழக்குப் பகுதியில் போர்ச் சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது.