Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 67

பேராசிரியர் S.H. ஹஸ்புல்லா மறைந்து 4 ஆண்டுகள் நிறைவு

0

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களின் – குறிப்பாக வடக்கு முஸ்லிம்களது இருப்புக்கான போராட்டத்தின் ஆய்வுக்குரல் ஓய்ந்து இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. 2018 ஆகஸ்ட் 25 ஆம் திகதி பேராசிரியர் S.H. ஹஸ்புல்லா வபாத்தானார்.

மாகாண எல்லை நிருணயக் குழுவின் அறிக்கை ஒரு பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகக் கடமையாற்றிய பேராசிரியர் மர்ஹூம் S.H. ஹஸ்புல்லா அவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பாதகமான அவ்வறிக்கை தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இறுதி அவாக் கொண்டிருந்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் 2018.08.24 அன்று குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சர் உட்பட சமுகமளித்த 139 பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து எதிர்த்து வாக்களித்து தோற்கடித்த ஒரேயொரு அறிக்கையாக அது இருந்தது.

மறுநாள் 2018.08.25 ஆம் திகதி பேராசிரியர் ஹஸ்புல்லா சேர் தனது 67 வயதில் யாழ்ப்பாணத்தில் வபாத்தானார். உள்ளத்தை அறிந்த இறைவன் அன்னாரை உளத்திருப்தியுடன் எடுத்துக் கொண்டான்.

1990 இல் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒருவரும் கல்விமானுமாகிய எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் இவ்வெளியேற்றத்தின் மூலம் பாரிய கடமைப் பொறுப்புக்களை சுமந்து கொண்டார்.

அப்போது பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்த அவர், களத்தில் இறங்கினார். புத்தளத்தில் வடக்கு முஸ்லிம்கள் வாழும் அகதி முகாம்களில் வலம் வரத் தொடங்கினார்.

யுத்த சூழலில் நிராயுதபாணிகளாக இருந்த தமது சமுதாயத்துக்கு நடந்த அநியாயத்தைக் கண்டு அம்மக்களுக்காக அறிவு ரீதியில் பணியாற்றத் தொடங்கினார்.

காலப்போக்கில் இலங்கை முழுவதுமான முஸ்லிம் சமூகத்தின் நலன் மற்றும் இருத்தலுக்காகவும் தேசத்தின் சுபிட்சம் மற்றும் அமைதிக்காகவும் அரும்பாடுபட்டார்.

வடக்கு முஸ்லிம்கள் தமது பலவந்த வெளியேற்றத்தில் இழந்த சொத்துக்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அவ்வறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கச் செய்தார்.

1993 ஜூன் 26 இல் கொழும்பு சாஹிரா கல்லூரி மண்டபத்தில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஏற்பாடு செய்த ‘வட மாகாண அகதி மாணவர்களின் கல்விப் பிரச்சினை’ பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் 25 பக்க கட்டுரையொன்றை சமர்ப்பித்து ஆற்றிய உரையின் போது அவரை நான் முதன்முறையாகக் கண்டேன். அன்று அவருடன் பேசினேன்.

அதன் பின்னர் ‘வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு’ (NMRO) நிறுவப்பட்டு அதன் தலைவராக பேராசிரியர் S.H. ஹஸ்புல்லா அவர்களும் உப தலைவராக மௌலவி B.A.S. சுப்யான் அவர்களும் செயலாளராக பொறியியலாளர் A.L.M. புர்ஹானுத்தீன் அவர்களும் பொருளாளராக சகாப்தீன் லுக்மான் அவர்களும் செயற்பட்ட காலத்தில் அவ்வமைப்புடன் நெருங்கிப் பணியாற்றினேன்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நான் கல்வி கற்ற காலத்தில் NMRO அலுவலகத்தில் என்னாலான பணிகளை மேற்கொண்டு வந்தேன். அங்கு அடிக்கடி ஹஸ்புல்லா சேர் வந்து செல்வார். கொழும்பில் அவர் செல்ல வேண்டிய சில இடங்களுக்கு என்னையும் ஆட்டோவில் அழைத்துச் சென்று அவர் இறங்கிடுவார். செலவுக்கு பணம் உள்ளதா? என அடிக்கடி என்னிடம் கேட்டுக் கொள்வார்.

மிக எளிமையாக இருப்பார். கொழும்பில் எங்களுடன் தங்கியிருக்கும் போதும் அகதிமுகாம் பயணங்களின் போதும் சாரம் உடுத்தி எந்தக் கஷ்டமான தங்குமிடத்திலும் பொறுமையுடன் தூங்கி எழும்புவார். சிரித்த முகத்துடனும் நெகிழ்வுத் தன்மையுடனும் குழுவாகப் பணியாற்ற விரும்புவார்.

வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான கருத்தையும் நிலைப்பாட்டையும் சொல்ல வேண்டிய இடங்களில் தெளிவாகவும் உறுதியாகவும் கவனமாகவும் சொல்வார். ஆவண ரீதியாக மாத்திரமன்றி தேவையானபோது களத்தில் இறங்கிப் போராடவும் அவர் தயங்கியதில்லை.

1995 அக்டோபர் 27 இல் கொழும்பில் UNHCR அலுவலகத்திற்கு முன்னால் பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்களின் தலைமையில் NMRO நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அகதி அந்தஸ்தை வலியுறுத்தியும் வடக்கு முஸ்லிம்களின் விவகாரத்தை உலகறியச் செய்யவும் அப்போராட்டத்தை அவர் திட்டமிட்டிருந்தார்.

வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் சாதாரணமாகப் பார்க்கப்படக் கூடாது என்பதில் பேராசிரியர் ஹஸ்புல்லா அதிக கவனம் கொண்டிருந்தார். நாடு விட்டு நாடு சென்றால் மாத்திரமே ‘அகதி’ என்ற அந்தஸ்தில் உரிமைகளும் தேவைகளும் நிறைவேற்றப்படுவது போல வடபுல முஸ்லிம்களும் அவ்வாறான உரித்துக்கு கவனம் கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கடைசி வரை இருந்தார்.

புத்தளத்திலேயே ஒரு நிரந்தர மீள்குடியேற்றம் இடம்பெறுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார். வட மாகாணத்திலுள்ள தமது சொந்த வாழிடத்தில் கௌரவமாக மீள்குடியேற்றப்பட்டு, இழப்பீடுகள் பெற்று, மீண்டும் துரத்தியடிக்கப்படாத உத்தரவாதத்துடன் சுதந்திரமாக வாழ்வதே உண்மையான மீள்குடியேற்றம் என அடிக்கடி கூறி வருவார். இதில் சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தார்.

புத்தளத்தில் சில வசதி வாய்ப்புகளுடன் தற்காலிகத் தீர்வாகவே புதிய குடியேற்றங்கள் இருக்க வேண்டும் என்றும் அதன்மூலம் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் முடிவுற்றதாக கருதப்பட்டு விடக்கூடாது என்றும் இது குறித்து அரசியல் தரப்பு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் விடாப்பிடியாக நின்றார். இதனால் அரசியல் தரப்புகளின் நிலைப்பாடுகளுடன் முரண் ஏற்பட்டது.

பேராசிரியர் ஹஸ்புல்லா எப்போதும் அரசியல்வாதிகளிடமிருந்து சற்று விலகியிருக்கவே விரும்பினார். அவருடைய செயற்பாடுகள் அரசியலுக்கானது என கட்டவிழ்த்துவிடப்பட்ட விமர்சனங்கள் குறித்து அவர் கூறும்போது ‘எதிர்காலத்தில் தான் அரசியலுக்குள் நுழையாதிருக்கும் போது மக்கள் தன்னை இயல்பாகவே புரிந்து கொள்வார்கள்’ என்பார்.

வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான அரசியல்வாதிகளின் போக்குகள் குறித்து அவர் மனக்கிலேசம் கொண்டிருந்தார். அரசியல் தரப்பினால் அதிகாரத்தின் மூலம் ஆற்றப்படக்கூடிய சில தேவைகளுக்காக அரசியல்வாதிகளுடன் அவர் அவ்வப்போது தொடர்பில் இருந்தார். ஆனால் தம்முடன் வந்து இணைந்து கொள்ளும்படி அரசியல்வாதிகள் விடுத்து வந்த அழைப்புகளை அவர் அடியோடு நிராகரித்தார்.

வடக்கில் தமிழ் சகோதரர்களுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையிலான சமாதான அமைதி உறவையும் புத்தளத்தில் உள்ளூர் – இடம்பெயர்ந்தோர் சக வாழ்வையும் கட்டியெழுப்ப அவர் அரும்பாடுபட்டார்.

உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் புத்தளத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பான பௌதீக சாத்தியவள அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு பேராசிரியர் ஹஸ்புல்லா தலைமை தாங்கினார். அக்குழுவில் என்னையும் ஓர் உறுப்பினராக சேர்த்திருந்தார்.

புத்தளம் மாவட்டத்தில் இவ்வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள இடங்கள் குடியிருப்புக்குப் பொருத்தமற்றவை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.

வடக்கு முஸ்லிம்களின் விவகாரம் குறித்து தென்னிலங்கை முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் தேசிய – சர்வதேச கல்விமான்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். ஆங்கில ஊடகங்களில் எழுதி வந்தார். இதற்காக அவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

யுத்த காலப்பகுதியில் அவரது பாதுகாப்புக் குறித்து அச்சுறுத்தல் காணப்பட்டிருந்தது. இதுபற்றி அவரிடம் விசாரித்தால் இலேசாக புன்னகைத்து விட்டுச் செல்வார். மனிதர் என்ற வகையில் தனிப்பட்ட முறையில் அவருக்கிருந்த கவலைகளையோ பிரச்சினைகளையோ பற்றிப் பேச மாட்டார்.

2002 அரசு – புலிகள் சமாதான முன்னெடுப்பு காலத்தில் முஸ்லிம்களை ஒரு பங்காளராக்கவும் அப்பேச்சுவார்த்தைகளில் வடக்கு முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தப்படவும் அதிக முயற்சி மேற்கொண்டார். வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை இடம்பெற்றபோது அவ்விடங்களுக்கும் சென்றார். புரிந்துணர்வு ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட SIHRN இல் தனது உயரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

2009 யுத்த முடிவில் முசலி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் போது ஏற்பட்ட வில்பத்து விவகாரம் குறித்து அதிக கவனம் கொண்டார். முசலி தெற்கில் முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து கேள்வி எழுந்தபோது ஆய்வு ரீதியாக பதிலளிக்க அதிக களப் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

முசலிப் பிரதேச நிலங்கள் பலவற்றை ஒதுக்குக் காடுகளாக பிரகனப்படுத்திய 2012, 2017 அதிவிசேட வர்த்தமானிகளின் தாற்பரியங்கள் குறித்துக் கண்டறிந்தார். பலவந்த வெளியேற்றத்தின் மூலம் காடுகளான மக்களின் வாழ்விடங்கள் வில்பத்து வனாந்தரம் என பிரச்சாரம் மேலெழுந்த போது அதிக கவலை கொண்டவராகக் காணப்பட்டார்.

இதற்காக அன்னாரது இறுதிக் காலங்களில் அடிக்கடி முசலி வந்து செல்வார். அளவக்கை சிறுக்குளத்தில் அமைந்துள்ள ஆசிரியர் M.M. மஸ்தான் (தௌபீக்) அவர்களின் வீட்டில் வந்து தங்கி நின்று முசலியில் ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தில் எனக்கும் அழைப்பு விடுப்பார். கள நிலவரம் குறித்து கலந்துரையாடி வந்தார். அக்காலப் பகுதியில் அவர் வேகமாக செயற்பட்டார். அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார்.

இறுதியில் ‘மீள்குடியேற்ற உரிமை மறுப்பு’ (Denying the Right to Return – Resettlement in Musali South and the Wilpattu Controversy) எனும் 120 பக்கங்கொண்ட ஆங்கில மொழி மூல ஆய்வு நூலொன்றை 2015 ஒக்டோபரில் கொழும்பு தபால் நிலைய கேட்போர் கூடத்தில் வெளியிட்டார்.

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராக 2015 நவம்பர் 13 முதல் கடமையாற்றி வந்த பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் 2017 ஒக்டோபர் 4 முதல் மாகாண எல்லை நிர்ணய குழுவிலும் இடம் பெற்றார்.

இக்குழுவின் ஆய்வுகளும் முடிவுகளும் நாடளாவிய முஸ்லிம் சிறுபான்மையினருக்கு மிகப் பாதகமான முறையில் இருப்பதாகக் கூறி வந்த அவர் குழுவின் அறிக்கையில் கையெழுத்திடுவதைத் தாமதித்தார். இறுதியில் தனியான இணைப்பொன்றையும் சமர்ப்பித்தார்.

அவரது விருப்பம் போலவே குறித்த அறிக்கை 2018 இல் பாராளுமன்ற வாக்கெடுப்பில் படுதோல்வியடைந்ததில் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அதுவே அவரது கடைசிக் கட்டமாக இருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் 2018 இல் யாழ்ப்பாணத்தில் வபாத்தானார். தனது பிறந்த மண்ணான எருக்கலம்பிட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அன்னாரின் முகத்தை இறுதியாகப் பார்த்தேன்.

பேராசிரியர் ஹஸ்புல்லா அவர்கள் எந்த சமூகத்தின் விடிவுக்காக தனது கால நேரங்களை செலவளித்து அதிகமதிகம் பாடுபட்டாரோ அந்த சமூகத்திற்கு (அரசியல்வாதிகளைத் தெரிந்தளவுக்கு) பேராசிரியரது புலமையும் சமூக விடிவுக்கான அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையும் புரியாது என்றே நினைக்கிறேன்.

பேராசிரியரது ஆய்வுப் பணிகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் பல இன்னும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக மன்னார் தீவு முஸ்லிம்கள் மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பான வெளியீடுகளைச் சொல்லலாம். இவை வெளிவராமை குறித்த கவலை என்னில் மேலோங்கியுள்ளது.

இறுதிவரை அறிவார்ந்த பல தளங்களில் சமூக நலனுக்காகவும் தேசத்தின் அமைதிக்காகவும் பணியாற்றிய பேராசிரியர் மர்ஹூம் ஹஸ்புல்லா அவர்களுக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வாஜிபாக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

Muhuseen Raisudeen,
Musali,
Chilawathurai.

நாகவில்லு முஸர்ரப் ஹோட்டல் காடையர்களால் சேதம்

0

புத்தளம் நாகவில்லு முஸர்ரப் ஹோட்டல் இன்று அதிகாலை சில காடையர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் குறித்த உணவகம் இவ்வாறு உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்திற்கு போதையில் வருகை தந்த இருவரினால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றிருந்ததுடன் மேலும் சில காடையர்களுடன் குறித்த உணவகத்திற்கு அவர்கள் மீண்டும் வருகை தந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து பாரிய சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளனர்.

வருகை தந்த காடையர்கள் மிலேச்சத்தனமான தாக்குதலை ஏற்படுத்தியதுடன் இன முருகளை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டு வேறு விதமான குழப்பத்தை ஏற்படுத்தவும் முயட்சித்துள்ளனர்.

உணவகத்தில் இருந்த உணவுகள், கண்ணாடிகள் மற்றும் தளபாடங்கள் பாரிய அளவில் சேதமாகியுள்ளதுடன் உணவகத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தியும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை புத்தளம் போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளன.

இதேவேளை தொடர்ச்சியாக சில காடையர்களினால் இவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

82 அமைப்பின் அனுசரணையில் நாகவில்லில் ஹஜ் விழா

0

82 பிரண்ட்ஸ் போறேவேர் அமைப்பின் இணை அனுசரணையில் ஹஜ் விழா 2022 நிகழ்வுகள் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு கடந்த 11,12 மற்றும் 13 ஆகிய மூன்று தினங்களாக இடம்பெற்ற ஹஜ் விளையாட்டு விழா 2022 நிகழ்வுகள் நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்தது.

தொடர்ச்சியாக மன்னார் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றுவந்த ஹஜ் விழா நிகழ்வுகள் இம்முறை எரிபொருள் சிக்கல் மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக புத்தளம் எருக்கலம்பிட்டியில் நடத்தப்பட்டது.

நாகவில்லு முஸ்லீம் காங்கிரஸ் ஏட்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை 82 பிரண்ட்ஸ் போறேவேர் அமைப்பினர் மிகவும் சிறப்பாக நடாத்தி முடித்ததுடன் நிகழ்வுக்கு இணை அனுசரணையும் வழங்கினர்.

சுமார் இருபதுக்கும் அதிகமான கழகங்கள் பங்குபற்றிய உதைப்பந்தாட்ட போட்டிகள் மூன்று தினங்களும் விழாவை அலங்கரித்தன.

பாரிய சிரமங்களுக்கு மத்தியில் மன்னாரில் இருந்து வருகை தந்து போட்டியில் கலந்துகொண்ட எருக்கலம்பிட்டி யங் ஹீரோஸ் அணியினர் அரையிறுதி போட்டியுடன் வெளியேறினார்

EYMA  மற்றும் எருக்கலம்பிட்டி யூத் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் பெனால்டி முறையில் EYMA அணி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

எருக்கலம்பிட்டி யங் ஹீரோஸ் மற்றும் எருக்கலம்பிட்டி யங் யூனைடெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெனால்டி முறையில் எருக்கலம்பிட்டி யங் யூனைடெட் அணி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

EYMA மற்றும் எருக்கலம்பிட்டி யங் யூனைடெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் EYMA அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தனர்.

மேலும் பார்வையாளர்களை கவரும் விதத்தில் ஏட்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிப் போட்டி ஒன்றும் இம்மைதானத்தை மேலும் அலங்கரித்தது.

இதேவேளை இரண்டு தினங்களாக மின்னொளியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி யூத் அணியினர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கிண்ணத்தை சுவீகரித்தனர்.

இறுதி தினமான நேற்றைய தினம் இடம்பெற்ற மைதான நிகழ்ச்சிகள் வருகை தந்திருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்ததுடன் பரிசளிப்பு நிகழ்வுகளுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தது.

குறித்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் 82 பிரண்ட்ஸ் போறேவேர் அமைப்பினர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லுவில் பரிசளிப்பு விழா 2021

0

நாகவில்லு YMMA பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்று 19.06.2021 ஞாயிற்றுக்கிழமை  புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

நாகவில்லு YMMA பாலர் பாடசாலையின் தலைவர் ஜனாப் AG நவாஸ்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாணவர்கள் சுமார் 44 பேர் கலந்துகொண்டனர்.

சிறார்களின் கண்கவர் விளையாட்டு நிகழ்வுகள் மைதானத்தை அலங்கரித்ததுடன் பார்வையாளர்களுக்கும் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டு குறித்த பாலர் பாடசாலையில் கல்விகற்று வெளியாகிய மாணவர்களின் பிரியாவிடையும் மேடை நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்தது.

குறித்த பாலர் பாடசாலையில் கல்விகற்று வெளியாகிய மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.

 

எருக்கலம்பிட்டி வைத்தியருக்கு உயரிய விருது

0

அகில இலங்கை ஆயுர்வே தவைத்திய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த விருது வழங்கல் மற்றும் வருடாந்த கூட்டம் 2022.6.17 இன்று குருநாகல் ஆயுர்வேத திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதில் ஆயுர்வேததுறையில் ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஆயுர்வேத மூலிகை பண்னை, தொழில் பயிற்சி நிலையம், ஆயுர்வேத கல்வி நிலையம், பாரம்பரிய அருங்காட்சியகம், ஆகிய முக்கிய அம்சங்கள் உள்வாங்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக செயற்படும் வைத்தியர்களுக்கு மாத்திரம் “ஆயுர்வேத விசாரித பண்டித” விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது எருக்கலம்பிட்டியை சேர்ந்த தேசகீர்த்தி, தேசபந்து, தேசமான்ய, வைத்திய சிரோன்மனி Dr.பி.எம்.எம்.சாலின் அவர்களுக்கு இன்றைய தினம் கிடைக்கபெற்றுள்ளது.

மன்னார் எருக்கலம்பிட்டியில் தனது ஆரம்பக்கல்வியை பூர்த்தி செய்த Dr.பி.எம்.எம். சாலின் அவர்களுக்கு
கடந்த ஏப்ரில் மாதம் 29ம் திகதி பதுளை ஆயுர்வேத சம்மேளனத்தினால் “வைத்திய சிரோன்மணி எனும் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவ்விருதினை இலங்கையில் பெற்றுக்கொண்ட ஒரே ஒரு முஸ்லிம் வைத்தியர் எருக்கலம்பிட்டியை சேர்ந்த  Dr.பி.எம்.எம்.சாலின் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் இவ்வளர்ச்சிக்கு ஊர் மக்கள் மற்றும் வைத்திய சமூகத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை விஷேட அம்சமாகும்.

மர்ஹூம் ஹில்மி அவர்களின் நினைவாக திறந்த வகுப்பறை

0

மன்னர் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், எருக்கலம்பிட்டி றினைசன்ஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமான மர்ஹூம் அலாவுதீன் முகம்மது ஹில்மி அவர்களின் நினைவாக மன்னர் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரிக்கு திறந்த வகுப்பறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எருக்கலம்பிட்டி றினைசன்ஸ் அமைப்பின் பூரண அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த திறந்த வகுப்பறை கடந்த 13.06.2022 திங்கட்கிழமை பாடசாலை அதிபர் ஜனாப் N.M. ஷாபி அவர்களின் தலைமையில் பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது.

18.11.1968 ஆம் ஆண்டு பிறந்த மர்ஹூம் அலாவுதீன் முகம்மது ஹில்மி சிறு வயது முதல் கல்வியில் அதிக ஆர்வம்கொண்டு விளங்கியதுடன் விளையாட்டிலும் அதீத திறமைகொண்டவராக திகழ்ந்தார்.

கடந்த ஆண்டு 05.07.2021 எம்மை விட்டும் பிரிந்த மர்ஹூம் அலாவுதீன் முகம்மது ஹில்மி அவர்களின் மறுமை வாழ்வுக்காகவும், சதகத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையை நாடியும் அவரின் நண்பர்களினால் குறித்த திறந்த வகுப்பறை அன்னாரின் தகப்பனாரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான அல்ஹாஜ் M.S. அலாவுதீன் அவர்களின் கரங்களால் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக மன்னர் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. G.D. தேவராஜா கலந்துகொண்டதுடன், எருக்கலம்பிட்டி றினைசன்ஸ் அமைப்பினர், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் விசேட ஒன்றுகூடல்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் விசேட ஒன்றுகூடல் இன்று 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை புத்தளம் நீச்சல் தடாக வளாகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் எருக்கலம்பிட்டி கிளையின் மத்திய குழு மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் பூரண அனுசரணையில் மேட்படி ஒன்றுகூடல் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் விருட்சத்தின் விழுதுகள் எனும் தலைப்பில் ஏட்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நாட்டில் ஏட்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படவேண்டிய முக்கிய நகர்வுகல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

விசேடமாக புத்தளம் எருக்கலம்பிட்டி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் போராளிகளுக்காக ஏட்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் புத்தளம் நகரசபை தலைவர் ஜனாப் S.M ரபீக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நண்பகல் ஆரம்பமான இந்நிகழ்வு பகல் போஷணையை தொடர்ந்து மாலை வரை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஜவ்பார் மரைக்கார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனாப் நியாஸ், ஜனாப் பைரோஸ், புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் போராளிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் லீக் போட்டியில் 2ஆம் இடம்பெற்ற எருக்கலம்பிட்டி அணி

0

மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஜாபகார்த்தமாக புத்தளம் நகரசபையினால் நடாத்தப்பட்ட புத்தளம் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இருதிப்போட்டி எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணியினருக்கிடையில் நேற்று புத்தளம் மாவட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் முதல் பாதிவரை இரு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடியதன் மூலம் எதுவித கோல்களும் இன்றி முதல் பாதி முடிவுற்றது. இரண்டாவது பாதியில் மிகவும் அபாரமாக விளையாடிய புத்தளம் லிவர்பூல் அணி 3 கோல்கள் அடித்து வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

புத்தளம் லிவர்பூல் அணி வீரர் நஸ்ரின் ஹெட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

போட்டியின் இறுதிவரை போராடிய எருக்கலம்பிட்டி எப்.சி அணி போட்டியின் இறுதி நேரத்தில் கோல் ஒன்று அடித்து எருக்கலம்பிட்டி ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சி அழித்தனர்.

எருக்கலம்பிட்டி எப்.சி அணி சார்பாக அஸ்கான் ஒரு கோலினை அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.

இப்போட்டியின் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வெற்றிபெற்ற புத்தளம் லிவர்பூல் அணிக்கு 30ஆயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணம் வழங்கிவைத்தார்.

இப்போட்டியின் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்களினால் தொடர் சுற்றின் இரண்டாம் இடத்தைப் பெற்ற எருக்கலம்பிட்டி எப்.சி அணியினருக்கு 20ஆயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வில் புத்தளம் நகரசபை தலைவர் ஜனாப் எம்.எஸ்.எம். ரபீக், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரி லுக்மான் சஹாப்தீன், மன்னார் பிரதேச சபை தலைவர் இஸ்மாயீல் இஸ்ஸதீன் மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

புத்தளம் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு எருக்கலம்பிட்டி அணி தெரிவு

0

மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஜாபகார்த்தமாக நடாத்தப்பட்டுவரும் புத்தளம் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இருதிப்போட்டிக்கு எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணியினர் தகுதிபெற்றுள்ளனர்.

குறித்த சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியி புத்தளம் அல் அஷ்ரா மற்றும் புத்தளம் லிவர்பூல் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய தினம் எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் நியூ ப்ரணட்ஸ் அணிகளுக்கிடையான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எருக்கலம்பிட்டி எப்.சி அணியினர் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற போட்டியின் முதல் பாதியில் நியூ ப்ரணட்ஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு கோலினை அடித்து வலுவான நிலையில் இருந்தனர். இரண்டாவது பாதியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எருக்கலம்பிட்டி எப்.சி அணியினர் இரண்டு கோல்கள் அடித்து வெற்றிபெற்றனர்.

எருக்கலம்பிட்டி எப்.சி அணி சார்பாக ரக்‌ஷான் மற்றும் பாஸில் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி புத்தளம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளனர்.

இன்றைய தினத் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, புத்தளம் நகரபிதா எஸ்.எம்.ரபீக் மற்றும் புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மர்ஹூம் ஏ.சி. அப்துல் ஹக் அவர்களின் 10வது ஆண்டு நினைவு மலர் வெளியீடு

0

முன்னைநாள் மன்னார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் eruk

மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தின் அதிபர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளாரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (11.03.2022) மாலை 4 மணியளவில் மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இவ் விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டார்.

அத்துடன் இதில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி தேவராஜா தேவதயாழினி முன்னாள் மன்னார் அரசாங்க அதிபர் எஸ்.மரியதாசன் குரூஸ் முன்னாள் மன்னார் அரசாங்க அதிபர் வி. விஸ்வலிங்கம் இவர்களுடன் மேலும் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் எம். ஆபேல் றெவல் திருமதி எஸ். சுகந்தி செபஸ்ரியான் மற்றும் முன்னாள் மடு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ். மாலினி வெனிற்றன் ஆகியோரும் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ் விழாவில் கலந்து கொண்ட மன்னார் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர்கள் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் அமரர் ஹக் சேர் அவர்களுடன் யுத்த சூழ்நிலை கடுமையாக இருந்த காலத்தில் பணியாற்றிய அந்தநாள் ஞாபகங்களையும் அவரின் மனிதநேய பணிகளையும் எடுத்தியம்பினர்.

‘ஹக் சேர்’ என்ற நூலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஹக் சேர் அவர்களின் மனைவிக்கு முதல் புத்தகத்தை வழங்கி வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.

இந் நூலுக்கான நயப்புரையை இந்து நாகரிய ஆசிரிய ஆலோசகர் திரு ச. ரமேஸ் வழங்கினார்.

மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் திருமதி வி. மேரி சியாளினி மற்றும் செல்வி அருள்மொழி குரூஸ் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் இறை வணக்க நிகழ்வையும் மேற்கொண்டதுடன், மன்னார் பரதக் கலாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளால் நடனங்களும் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வை ஓய்வுநிலை கிராம அலுவலர்களின் பொறுப்பாளராக திகழ்ந்த ராதா பெனாண்டோ தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் மர்ஹும் ஏ.சி.அப்துல் ஹக் சேர் காலத்தில் அவருடன் பணியாற்றியவர்கள் பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கல்வியாளர் ஹக் சேர் அவர்களின் ஞாபகர்த்தமாக புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது மாத்திரமல்ல இவ் நிகழ்வில் கலந்துகொண்ட யாவருக்கும் அவரின் ஞாபகர்த்தமாக அவரின் குடும்பத்தினர் சுவர் கடிகாரங்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.