Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 7

நாய்க்கு தூக்கு தண்டனை!

0

ஆடொன்றை கடித்துக் குதறிய நாய்க்கு மரண தண்டணை வழங்கி ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை தீர்ப்பு வழங்கியுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

தனது ஆடொன்றை நாய் கடித்து குதறி விட்டதாக பொலிஸ் நிலையத்தில்,பெண்ணொருவர் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் இணக்க சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இணக்க சபையிலிருந்த நீதவான்களான மூவரும் அந்த நாயைத் தூக்கிலிடுமாறு தீர்ப்பு வழங்கினர்.

இணக்க சபையிலிருந்த நீதவான்கள் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார். அதன் பின்னர் நீதவான்கள் நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைப்படத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன் முறை பொங்கல் கொண்டாட்டம்!

0

கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு (24) வைபவரீதியாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது.

இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கு அமைய, கௌரவ சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சின் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இந்த வைபவம் இடம்பெற்றது. 

கௌரவ உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ் கலாசாரம் பற்றிய புரிதலை ஊக்குவித்தல், தமிழ் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மதித்தல், இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளத்தை வளர்ப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவசாயிகள் தமது அறுவடைக்கு ஒத்துழைப்பு நல்கிய சூரியக்கடவுள், நிலம் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய தைப்பொங்கல் நிகழ்வு மதச்சடங்குகளுடன் ஆரம்பமாகியது. வண்ணமயமான கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட பாராளுமன்ற வளாகத்தில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் குறிப்பிடுகையில், மனிதர்கள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமாகன தொடர்புகளுடன் இருக்கின்றார்கள் என்பதை தைப்பொங்கல் எடுத்துக் காட்டுவதாகவும், இதன் மூலம் அனைத்து இனங்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் சகவாழ்வு நிரூபிக்கப்படுவதாகவும் கூறினார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி கருத்துரை வழங்கியதுடன், அனைத்து இனக்குழுக்களுக்கிடையேயான ஒற்றுமைக்கு மொழித் தடையை கடக்க வேண்டும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் இதனை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், இனம் மத பாகுபாடு இல்லாமல் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான பாராளுமன்றத்தின் முயற்சிகளைப் பாராட்டுவதாகக் கூறினார்.

தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள், பணியாளர்கள், அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரலில்!

0

ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அவர் நேற்றைய தினம் அங்கு செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வட மாகாண மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தமைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைகிறது. இதேவேளை, கடந்த கால அரசாங்கங்கள் தேர்தல்களை பிற்போட்டிருந்தன. 

தற்போது, உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது, நீதிமன்றங்களில் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும் அவற்றினால் தேர்தலுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேநேரம், ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் அல்லது நான்காம் வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், தேசிய பிரச்சினைகளை 4 விதமான அணுகுமுறைகளுடன் கையாண்டு தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

 பதின்மூன்று அல்லது சமஷ்டிக்கு மாறாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் சுமூகமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்ப்பதாக ஏலவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கூறியதை போல தற்போது அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை!

0

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட சமர்ப்பணங்களுக்கு பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபரை தலா 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதன்படி, சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் உத்தரவிட்ட நீதவான், சாட்சிகளுக்கு அழுத்தம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் உத்தரவிட்டார்.

நீதிபதி தனது முடிவை அறிவிக்கும் போது, ​​சந்தேகநபரை மேலும் விளக்கமறியலில் வைக்க போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

ஹக்கீமின் சாணக்கியத்தில் சிக்கிய அரசு!

0

ஆட்சிபீடமேறுவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய தேசிய மக்கள் சக்தி, ஆட்சிபீடமேறிய பின்னர் வாக்குறுதிகளுக்கு என்னாச்சு? எனக்கேட்டால் கதை சொல்லி மழுப்புவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

வாங்குரோத்தடைந்து வீழ்ந்த நாடு என்று அறியாமலா அவ்வளவு வீர வசனங்களை தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளாக முழங்கினார்கள்? வென்ற பின்னர் எதையெல்லாம் கடந்த அரசாங்கத்தின் பிழை என்றாரர்களோ, அதனையே பின் தொடர்வதைக் காண முடிகின்றது.

தேங்காய், அரசி, உப்பு என்ற வரிசையில் மீனும் இறக்குமதி செய்ய வரும் என்றளவுக்கு அமைச்சர்கள் கருத்துத் தெரிவிப்பதையும் தட்டுப்பாட்டுக்கான காரணங்களாக ஆட்சியாளர் சொல்லும் காரணங்களும் நகைப்புக்குரியது.

நேற்று ஒன்று நாளை வேறொன்று என மாற்றி மாற்றி கதை சொல்லும் அரசாங்கத்தின் அண்மைக்கால போக்கை அவதானித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முக்கியமான சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார். இதனால் அடிக்கடி ரவூப் ஹக்கீமோடு அரச தரப்பு மோதிக் கொள்வதைப் பார்க்கலாம்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிப்பதற்கு ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திடம் தொடுத்த கேள்வி தான் காரணமாக அமைந்தது.

வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நஷ்டயீடு விவகாரத்திலும் அரசாங்கம் முன்னர் அறிவித்த தொகையை விட மேலும் அதிகரிக்க முன்வந்ததுக்கும் பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் பேச்சுக்களே காரணமாக அமைந்தது.

அதேநேரம், ரோஹிங்கிய அகதிகள் விடயத்திலும் அரசாங்கத்தின் போக்கு முன்னைய அரசாங்கத்தின் போக்கை விட மாற்றமாக இருந்ததுடன், ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பும் அரச உயர் தலைவர்களின் கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் சர்வதேச அரங்கில் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுமென்பதோடு, ரோஹிங்கிய அகதிகள் மியன்மாரில் அனுபவிக்கும் கொடுமைகளை உணர்ந்து அவர்கள் விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் அண்மையில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் கொண்டு வந்தார்.

குறித்த பிரேரணையில் ரோஹிங்கிய அகதிகள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது அவர்களை பத்திரமாக மீட்டு வந்த இலங்கை கடற்படைக்கு தனது கட்சி சார்பாக நன்றிகளைத் தெரிவித்ததோடு, கடந்த காலங்களிலும் இவ்வாறு கொடுமைக்குள்ளாகி உயிர் வாழும் நோக்கில் வெளிநாடுகளை நோக்கிச்சென்ற ரோஹிங்கிய அகதிகள் திருப்பியனுப்பப்பட்ட நிலையில் இலங்கைக்கு வந்த அகதிகள் விடயத்தில் கடந்த ஆட்சியாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொண்டதைச் சுட்டிக்காட்டி, ஐக்கிய நாடுகளின் (சமவாயங்கள்) தொடர்பாகவும் கவனஞ்செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

இவ்விடயங்களைப் பேசும் போது அரசாங்கம் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டில் மாற்றங்கள் வந்திருக்குமென நம்புவதாகவும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இதற்கு தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய அரசாங்கம் ரவூப் ஹக்கீம் இனவாதம் பேசியது போன்று அரச தரப்பு உரைகளை ஆற்றியதை காண முடிந்தது.

உண்மையில் அரச தரப்பு ஒவ்வொரு கருத்தாக வெளியிட்டுக்கொண்டிருப்பதால் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவும், ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கும் அனுப்புவதால் ஏற்படும் விளைவுகளை தெளிவுபடுத்துவதாக தனது பிரேரணையைக் கொண்டு வந்த நிலையில், அரசாங்கம் தாங்கள் இனவாத அடிப்படையில் செயற்படவில்லை என்று சொல்லிக்கொண்டாலும் முஸ்லிம்கள் விடயத்தில் (அமைச்சரவை நியமனம் உட்பட) அரசாங்கத்தின் செயல் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லையென்ற விமர்சனம் இந்த அரசாங்கத்தை ஆதரித்த முஸ்லிம் மக்கள் தற்போது வெளிப்படுத்தும் விதத்தை வைத்து அவதானிக்க முடிகின்றது.

அது போன்று ரோஹிங்கிய அகதிகள் முஸ்லிம்களாக இருப்பதால் அரசாங்கம் அவர்களைத் திரும்ப மியன்மாருக்கு அனுப்ப முற்படுகிறதா? என்ற கேள்வியும், அரச முக்கிய அமைச்சர்களின் கருத்து வெளியீடுகளும் அதனை அடிப்படையாகக்கொண்டு ஏனையவர்களும் குறித்த அகதிகளை ஆபத்தானவர்களாக சித்தரிக்க முயற்சிப்பதையும் காண முடிந்தது.

இந்நிலையில் குறித்த பிரேரணை அரசாங்கத்திற்கு ரவூப் ஹக்கீம் மீது கோபத்தை ஏற்படுத்தவே அரச தரப்பு பாராளுமன்றத்தில் கொந்தளித்தது.

இதனைப்பார்க்கும் போது சில விடயங்களை உணர முடிந்தது. அரச தரப்பில் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டை நியாயப்படுத்தவும், அவர்களின் முடிவுக்கு கட்டுப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை சென்ற தேர்தல் காலங்களில் முன்வைத்த கருத்தை உண்மைப்படுத்துவதாகவே காண முடிந்தது.

இவ்விவாதத்தில் பேசிய அரச தரப்பு, குறித்த பிரேரணை இனவாத நோக்கம் கொண்டதாகச் சித்தரிக்க முற்பட்டதோடு, ரோஹிங்கிய அகதிகளைத் திரும்ப மியன்மாருக்கு அனுப்பும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என்ற விடயத்தைச் சொன்னார்கள்.

அப்படியென்றால், ரவூப் ஹக்கீம் ஏன் பிரேரணை கொண்டு வர வேண்டுமென்ற கேள்வி வரலாம். அதற்கு அரசாங்க பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்ர பேசும் போது, ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் மூன்று கருத்துக்கள் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

ரோஹிங்கிய அகதிகளைத் திரும்ப மியன்மாருக்கு அனுப்புதல், நாட்டில் வைத்திருத்தல், பாதுகாப்பான வேறு நாடுகளுக்கு அனுப்புதல் போன்ற கருத்திருந்ததாகவும், இது கருத்து மாத்திரமே, தீர்மானமில்லை என்பதோடு, ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பமாட்டோம் என்ற செய்தியையும் சொன்னார்.

அரச முக்கிய தலைவர்களிடமும் அமைச்சர்களிடமும் ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பும் எண்ணமிருப்பதை அறிந்ததால் அதை அரசாங்கம் தீர்மானமாகக் கொண்டு வந்து விடக்கூடாதென்ற நோக்கத்தில் மனிதாபிமான அடிப்படையில் தான் ரவூப் ஹக்கீம் குறித்த பிரேரணையைக் கொண்டு வந்தார்.

குறித்த பிரச்சினையை ரவூப் ஹக்கீம் மக்கள் மயப்படுத்தியதால் தாங்கள் குறித்த விடயத்தில் தீர்மானங்களை வெளியிட வேண்டிய ஒரு சூழலை ரவூப் ஹக்கீம் ஏற்படுத்தி விட்டார் என்பதனால் ஆத்திரமடைந்த அரச தரப்பு, ரவூப் ஹக்கீமை நோக்கி விரல் நீட்டிப் பேசியதைக் காண முடிந்தது.

கடந்த ஆட்சிகளில் ஆளுங்கட்சியாக இருந்த போது அன்று வருகை தந்த ரோஹிங்கிய அகதிகள் அச்சுறுத்தலுக்குள்ளான போது என்ன செய்தீர்கள் என்றும் கேட்டார்கள்.

உண்மையில் குறித்த கேள்விக்கு தக்கபதிலடியை ரவூப் ஹக்கீம் கொடுத்தார்.

அன்றைய காலகட்டங்களில் காத்திரமாக ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் செயற்பட்டதனால் தான் அவர்களுக்கெதிரான சதிகளை முறியடித்து பாதுகாத்ததை இவர்கள் மறந்திருக்கலாம் அல்லது நாம் இரண்டு மாதங்களுக்குள் கொடுத்த வாக்குறுதிகளையே மக்கள் மறந்து விட்டார்கள், இவைகளையா நினைவு வைத்திருக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் பேசியிருப்பார்கள்.

முஸ்லிம்கள் அதிகளவாக எங்களுக்குத்தான் வாக்களித்தார்கள். எங்கள் கட்சித்தான் முஸ்லிம் கட்சி என்று சொன்ன சபை முதல்வர், முஸ்லிம்கள் விடயத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? என உங்களுக்கு வாக்களித்த பெரும்பாலான முஸ்லிம்களை குறுகிய காலத்தில் உணரச்செய்தவர்களும் நீங்கள் தான் என்பதும் உங்களது சாதனை தான்.

சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்திலிருந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் ஆடை விடயத்தில் வெளியிட்ட கருத்துக்களை மறக்கவில்லை.

முஸ்லிம்களின் திருமண வயது விவகாரம் மீண்டும் இந்த அரசாங்கத்திலும் ஆரம்பிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தங்களுக்கு என்று எதையாவது கேட்கும் போது இலங்கையர்களாகப் பார்க்க வேண்டும். இன ரீதியாகப் பார்க்கக்கூடாதெனக் கூறிக்கொண்டு செயலில் இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்பதை அறியாத முட்டாள்களாக முஸ்லிம் சமூகமில்லை என்பதை அரசாங்கம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியாக மக்கள் மத்தியில் செல்வதற்குப் பயந்து தேசிய மக்கள் சக்தியாக வந்தவர்கள், அனுர அலையில் பலரும் அள்ளுண்டு போன போது, தேர்தலில் போட்டியிடாது தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் பிரவேசித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க அறிவாரோ? முதல் முதலாக கண்டி மாவட்டத்தில் மரச்சின்னத்தில் தேர்தல் கேட்டு ரவூப் ஹக்கீம் பாராளுமன்றம் சென்றதை நினைவூட்டிக் கேட்கிறோம்.

பாராளுமன்றத்தில் இவ்வாறு பேசி ரவூப் ஹக்கீமை மடக்கலாம் என அரச தரப்பு கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்ட போது, ரவூப் ஹக்கீம் தான் என்ன நோக்கத்திற்காக குறித்த பிரேரணையைக் கொண்டு வந்தாரோ அந்தத் தீர்மானத்தை, அதாவது ரோஹிங்கிய அகதிகளைத் திரும்ப மியன்மாருக்கு அனுப்புவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடாக அரச தரப்பு சபைக்கு அறிவித்ததிலிருந்து ரவூப் ஹக்கீம் சாணக்கியமாக தனது பிரேரணையை வெற்றி கொண்டதைக் காண முடிந்தது.

முஸ்லிம்கள் அதிகளவாக தங்களுக்கு வாக்களித்து அதிக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் கட்சி எனப்பீத்திக் கொள்ளும் அரசாங்கம், கடந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த ஜனாஸா எரிப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அட்டுலுகம, அக்குறணை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற விடயங்கள், கொரோனா காலத்தில் முடக்கி பாதிப்புகளை ஏற்படுத்திய விடயங்கள் எனப்பல அநீதியான விடயங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நீதியைப்பெற்றுக் கொடுக்கப்போகிறார்களா? எனப்பார்க்க வேண்டும்.

அதே போன்று, பாராளுமன்றத்தில் வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் மனிதாபிமானத்தோடு ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் நடந்து கொள்கிறார்களா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ)- ஓட்டமாவடி.

மருத்துவமனை மீது தாக்குதல்-70 பேர் பலி!

0

சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 70 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., என்றழைக்கப்படும், சூடான் ஆயுதப்படைக்கு அப்தெல் பத்தா அல் – புர்ஹான் என்பவர் தலைமை வகிக்கிறார். இவரது படைக்கும், ஆர்.எஸ்.எப்., என்றழைக்கப்படும், ‘ரேபிட் சப்போர்ட் போர்சஸ்’ எனும் பயங்கரவாத படைக்கும் இடையே 2023ல் போர் துவங்கியது. ஆர்.எஸ்.எப்., பயங்கரவாத குழுவுக்கு பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்கள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்நிலையில், சூடானின் வடக்கு டார்பர் பகுதியில் உள்ள மருத்துவமனை மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 70 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சூடானில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம். சேதமடைந்த மருத்துவ வசதிகளை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுற்றுலாவுக்கு ரயில் சேவைகள் ஆரம்பம்!

0

சுற்றுலா ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக சில ரயில் சேவைகள் ஆரம்பம்

சுற்றுலா கைத்தொழில் முன்னேற்றுதல் மற்றும் தூரப் பயண சேவைக்காக புதிய புகையிரத சேவைகள் சிலவற்றை ஆரம்பிப்பதற்கு புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையகப் பாதையில் புகையிரதப் பயணிகளுக்கு மத்தியில் பிரபலமான, மிகவும் கவர்ச்சிகரம் மற்றும் அந்தப் புகையிரதப் பயணத்திற்கு காணப்படும் அதிக கேள்வி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எல்ல – ஒடிசி – கண்டி மற்றும் எல்லா ஒடிசி – நானுஓயா என புதிய புகையிரத சேவைகள் இரண்டை பெப்ரவரி மாதத்தில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி பத்தாம் திகதியிலிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் எல்லா ஒடிசி – கொழும்பு புகையிரதத்திற்கு மேலதிகமாக பயணிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எல்ல – ஒடிசி – கண்டி புகையிரதம் பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கண்டி மற்றும் தெம்மோதரை இடையே பயணிக்கக் கூடியதாக இருக்கும்.

எல்ல – ஒடிசி – நானுஓயா புகையிரதம் பெப்ரவரி 10 ஆம் திகதியில் இருந்து, திங்கட்கிழமைகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் நானு ஓயா மற்றும் பதுளை இடையே பயணிக்கவுள்ளது.

கொழும்பு மற்றும் பதுளை இடையே செல்லும் எல்ல ஒடிசி – கொழும்பு புகையிரதத்திற்கு மேலதிக பயணம் பெப்ரவரி 10ஆம் திகதியில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு மற்றும் பெப்ரவரி 11-ம் திகதியிலிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பதுளையில் இருந்து புறப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அது தவிர ஜனவரி 31 ஆம் திகதியில் இருந்து கொழும்பு மற்றும் காங்கேசந்துறை இடையேயான இரவு தபால் புகையிரத சேவை தினமும் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

ICC விருதை தட்டிப்பறித்த கமிந்து மெண்டிஸ்!

0

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.

2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக நான்கு வீரர்களின் குறுகிய பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டிருந்தது. இதில் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரு துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கமிந்து மெண்டிஸ் தவிர, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் மற்றும் பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் சயிம் அயூப் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக திறக்கப்பட்ட சுற்றுலாப் பகுதி!

0

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர கழுகு காட்சி முனை (Eagle’s View Point) உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர கிராமத்தைச் சுற்றி இந்த கண்காணிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது.

Eagle’s View Point இன்று (26) வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜிதஹெரத் தலைமையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்காக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையை ஒரு முக்கிய மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் முதன்மை நோக்கத்துடன் 2024 ஜூலை 31ஆம் திகதியன்று தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள், இலங்கை விமானப்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கான நிதி பங்களிப்பை சுற்றுலா அபிவருத்தி அதிகாரசபை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி நிதியத்தின் அசத்தல் திட்டம்!

0

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐந்து பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பில் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கும் வகையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலின் போதே இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியத்திற்கு புதிய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வலையமைப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் ஊடாக மக்களுக்கு மிகவும் வினைத்திறன் மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக செயலாற்றி வருவதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே தெரிவித்தார்.

இதனூடாக எவராயினும் தமது பிரதேச செயலகத்தின் ஊடாக நோய்க்கு அமைவான கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும், அது தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகத்தினால் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.நோயாளர்களை தெரிவு செய்யும் முறை, அவர்களின் ஆவணங்களை தயாரிக்கும் முறை, ஜனாதிபதி நிதியத்தின் பொறுப்பு என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு