Tuesday, December 23, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 7

தன்கொடுவ பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் பாதிப்பு!

0

ஜூட் சமந்த

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, மா ஓயா நதி பெருக்கெடுத்ததினால் தன்கொட்டுவ பகுதியில் செயல்பட்டு வந்த ஏராளமான செங்கல் சூளைகள் அழிக்கப்பட்டுள்ளன.

தன்கொட்டுவ பகுதியில் மட்டும் சுமார் 400 செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளைகளில் பெரும்பாலானவை மா ஓயா தொகுதியில் இயங்குகின்றன. இதற்குக் காரணம் மூலப்பொருட்களைப் பெறுவதற்கான எளிமை. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 40,000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் செங்கல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். செங்கல் சூளைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல் தொழிலதிபர் திரு. டபிள்யூ. ஏ. பியாரத்ன, தற்போது எதிர்கொள்ளும் நிலைமை குறித்து பேசியபோது,

“மா ஓயா நிரம்பி வழிவது எங்களுக்கு ஒரு சாதாரண விஷயம். ஏனென்றால் மா ஓயா வருடத்திற்கு ஒரு முறை நிரம்பி வழிகிறது. ஆனால் என் வாழ்க்கையில் இதுபோன்ற பேரழிவை நான் சந்தித்ததில்லை.

எனது சூளையில் சுமார் 200,000 செங்கற்கள் இருந்தன. சில கற்கள் எரிக்கப்பட்டு விற்க தயாராக இருந்தன. மற்றவை எரிக்க தயாராக இருந்தன. கற்களை எரிப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஏராளமான விறகுகள் குவிக்கப்பட்டிருந்தன. சூளைக்கு அருகில் கட்டப்பட்ட இரண்டு வீடுகளில் 10 தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

எரிந்த கற்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. எரிக்கத் தயார் செய்யப்பட்ட அனைத்து கற்களும் தண்ணீரில் கரைந்தன. செங்கற்களை எரிப்பதற்காக கொண்டு வரப்பட்ட அனைத்து விறகுகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. தொழிலாளர்கள் தங்கியிருந்த இரண்டு வீடுகளும் அழிக்கப்பட்டன.

இந்தத் தொழிலை மீண்டும் தொடங்க வேண்டும். அரசாங்கத்திடம் நாங்கள் எங்களுக்கு உதவ வேண்டாம் என்று சொல்கிறேன். எங்களுக்கு ஏதாவது நிவாரணக் கடன் கொடுங்கள். பிறகு மீண்டும் தொழிலைத் தொடங்கலாம்.

எப்படியும், சந்தையில் செங்கல் பற்றாக்குறை உள்ளது. எனவே, சிலர் செங்கல் விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசாங்கம் அதையும் கவனித்துக் கொண்டால் நல்லது.”

இளம் செங்கல் தொழிலதிபர் தருஷா லக்ஷன் கூறியதாவது.

“எனது சூளையில் 17,000 செங்கற்கள் சுடுவதற்கு தயாராக இருந்தன. செங்கற்களை உற்பத்தி செய்ய தேவையான 19 லோடு களிமண் கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. இப்போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.”

செங்கல் தொழிலின் தற்போதைய நிலைமையை ஆராய மா ஓயா பள்ளத்தாக்குக்கு கடினமான பயணத்தை மேற்கொண்ட நாங்கள் சந்தித்தவேளை, அங்குள்ள பலர் தற்போது இருக்கும் நிலைமையைப் பற்றிப் பேசினர். செங்கல் தொழிலை மீண்டும் தொடங்க தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா-கனடா எல்லையில் பயங்கர நிலநடுக்கம்!

0

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடா நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவின் ஜூனோ நகரில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் வைட்ஹார்ஸ் பகுதியில் இருந்து மேற்கே 250 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

பூமிக்கடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நடுக்கம் மையம் கொண்டிருந்தது. சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவானாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து கனடா இயற்கை வளத்துறையின் நிலநடுக்கவியல் ஆய்வாளர் அலிசன் பேர்ட் கூறுகையில், ‘மலைப்பாங்கான மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளின் சுவர்கள் மற்றும் அலமாரிகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக கட்டிடங்களுக்கு எந்தவிதமான கட்டமைப்பு பாதிப்புகளோ அல்லது உயிர் சேதங்களோ ஏற்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இனி இதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்!

0

ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனத் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த நிலைமையில் கொதிக்க வைத்த நீரைப் பருகுவது மிகவும் முக்கியமானது என அப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண தெரிவித்தார். 

அத்துடன், குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும் கிணறுகள் வெள்ள நீரால் நிரம்பி வழிந்திருந்தால், அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்னர் முறையாகச் சுத்தம் செய்து, குளோரின் இட்டு தொற்று நீக்கம் செய்த பின்னரே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். 

மேலும், உணவின் மூலம் பரவக்கூடிய நோய்கள் குறித்துக் கவனமாக இருக்கையில், சமைத்த உணவுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சுத்தமாக உணவைச் சமைப்பதுடன், வயிற்றுப்போக்கு போன்ற நோய் நிலைமைகளைக் கொண்ட ஒருவர் உணவு சமைக்கும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது என்றும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார். 

அத்துடன், உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் உண்ணும் நேரங்களைப் பொறுத்து உணவு நஞ்சாகக்கூடும் என்றும், அதற்கமைய உணவு சமைத்ததிலிருந்து 4 மணித்தியாலங்களுக்குள் உணவை உட்கொள்வது மிகவும் சிறந்தது என்றும், உணவருந்தும் முன் கைகளை நன்றாகக் கழுவுவது அவசியம் என்றும் விசேட வைத்திய நிபுணர் இங்கு குறிப்பிட்டார். 

மேலும் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண, 

“பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது, சேறு தேங்கியுள்ளது. இது எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவுவதற்கு மிகவும் ஏதுவான சூழலாகும். எலிக்காய்ச்சல் என்று கூறினாலும், எலிகள் மட்டுமல்லாது நாய்கள், மாடுகள் மற்றும் பன்றிகளின் சிறுநீரிலிருந்தும் நீர் அசுத்தமடையக்கூடும். அந்த அசுத்தமான நீர் எமது உடலில் உள்ள வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் அல்லது காயங்கள் மூலமாகவும் உடலுக்குள் செல்லக்கூடும். 

வெள்ளப்பெருக்கிற்கு உள்ளான அனைத்து நபர்களுக்கும் வழங்குவதற்காக ‘டொக்ஸிசைக்ளின்’ (Doxycycline) எனும் மருந்தை நாம் விநியோகித்துள்ளோம். அந்த மருந்து வில்லைகளில் 200 மில்லிகிராமை உடனடியாக உட்கொள்ள வேண்டும். சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டாலோ அல்லது உங்கள் வீடு நீரில் மூழ்கியிருந்தாலோ, வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து இந்த மருந்தளவை உட்கொள்ளுங்கள்,” என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த ஹிஸ்புல்லாஹ் எம்.பி!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) நடைபெற்றது.

இச் சந்திப்பின்போது அண்மைய வெள்ள அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தை மீண்டும் முன்னேற்றுவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் கிராமங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இவ்விடயங்களுக்கு தேவையான நிதிகளினை ஒதுக்கீடு செய்து, மறுசீரமைப்புப் பணிகளை விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த பணிகளை விரைவில் முன்னெடுக்க சகல ஆயத்தங்களும் செய்வதாக ஆளுநர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில், ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.எஸ் நழீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0

நாட்டின் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (7) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு நிற (Red) அதி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் (Orange) நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற (Yellow) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மல்வத்து ஓயா ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளதோடு, குறித்த ஆற்றை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

100 கோடி தேவையென்றாலும் பேசி பெற்றுத்தருகிறேன்!

100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன்; அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள்

மூதூர் பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலில் ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் உருக்கமான வேண்டுகோள்..!

மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், புதிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த மூதூர் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது அவர், “மூதூரை மீண்டும் உயிர்ப்பிக்க 100 கோடி தேவையென்றாலும், நான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி பெற்றுத்தருகிறேன். மக்கள் அழிந்துபோய் தவிக்கும் இந்த நிலையை மாற்றவும் மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்பவும் ஒத்துழைப்பு வழங்குங்கள்” என பிரதேச செயலாளரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி பிரச்சனைகள், குடிநீர், சுகாதாரம், வீட்டு சேதங்கள், வாழ்வாதார இழப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சத்தியப்பிரமாணம் செய்ததோடு களத்தில் இறங்கிய தாஹிர் எம்.பி!

0

தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றுள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர் மரைக்கார், முதலாவது பாராளுமன்ற அமர்வை முடித்துக் கொண்டு ஆரவாரமாக ஊர்வலம் எதுவும் செல்லாது தனது மாவட்ட மக்களின் சோகத்தில் பங்கெடுத்தவிடயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொற்றாமுல்லை, தும்மோதர, நாத்தான்டிய, மாதம்ப போன்ற பிரதேசங்களுக்கு நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களோடு புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM.தாஹிர் அவர்கள் விஜயம் மேற்கொண்டு அந்த மக்களுடைய தேவைகளை கேட்டறிந்ததுகொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தி விரைந்து செயற்படுவதாக உறுதியளித்தார்.

இதேவேளை குறித்த அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளதுடன், மக்களுக்கான நிவாரண உதவித் திட்டங்களை விரைவாக வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரச அதிகாரிளுடன் இணைந்து மேற்கொள்வது தொடர்பாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அவசரமாக மாநாட்டைக் கூட்ட வேண்டும்!

ஜனாதிபதி அவசரமாக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும், அல்லது விரைவில் கவனம் வேறெங்கோ திரும்பி விடும்.

தொகுப்பு: எம்.என்.எம். யஸீர் அறபாத் (BA) ஓட்டமாவடி

இந்த நேரம் மிகவும் முக்கியமானது. இன்னும் இரண்டு வாரங்கள் சென்றால், சர்வதேசத்தின் கவனம் நம்மைவிட்டு வேறெங்கோ திரும்பி விடும். இந்த வேளையில், உடனடியாக ஜனாதிபதி ஒரு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவதற்காக உலக அரச தலைவர்களுடன் பேச முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட எம்.பியுமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (05) சபையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று அரசாங்கம் வழங்கியுள்ள இந்த அனர்த்த தரவுகளை குறிப்பாக சுனாமிப் பேரழிவோடு நான் ஒப்பிடுகிறேன்.

சுனாமிப் பேரழிவால் ஏற்பட்ட இழப்பையும், இந்த அனர்த்தத்தால் ஏற்படப்போகும் இழப்பையும் ஒப்பிட்டு, சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை மற்றும் துணை அறிக்கை குறித்து நான் பேசுகிறேன்.

இன்று நமக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தகவலின்படி, சுனாமி பேரழிவின் போது ஏற்பட்ட சொத்து இழப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும். ஆனால், தற்போதைய காலநிலை அனர்த்தத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சுனாமியின் தாக்கத்தை விட ஆறு மடங்கு அதிகமாகும். சொத்து இழப்பிற்காக, மேலும், நிலத்தின் உட்கட்டமைப்பை மீட்டெடுக்கத் தேவைப்படும் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட அதே அளவு, அதாவது 4.5% முதல் 5% ஆக இருக்கும். இந்தக் காலநிலை பேரழிவால் ஏற்படும் அழிவுக்காக GDPயில் 3% முதல் 5% தேவைப்படும்.

எனவே, எதிர்க்கட்சியின் சார்பாக நாங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைக்கும்போது, முடிந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், எங்களை விமர்சிக்காமல் விட்டுவிடுங்கள். இரண்டு தரப்புகளிலும் ஒரு சேற்றை வாரி இறைக்கும் போர் நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாம் அந்த நிலைக்குச் செல்ல மாட்டோம்.

இந்த வேளையில், உடனடியாக ஜனாதிபதி ஒரு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவதற்காக உலக நாடுகளின் அரச தலைவர்களுடன் பேச முன்வர வேண்டும்.

குறிப்பாக, இந்தியப் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர், அத்துடன் ஜேர்மனி ஜனாதிபதி, ஐக்கிய அரபு அமீரக (UAE) ஆட்சியாளர் மற்றும் சிலரை அழைத்து அவர்களுக்குத் தொலைபேசியில் பேசி, சர்வதேச நன்கொடை மாநாட்டின் ஊடாக நமக்கு இந்த வேளையில் இரண்டு முதல் மூன்று பில்லியன் டொலர்கள் திரட்டியாக வேண்டும். அதற்கான முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகள் நம் மத்தியில் உள்ளனர். அனுபவம் வாய்ந்த ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகிய அனைவரையும் ஒன்று கூட்டுங்கள். இந்தத் தேசிய விவகாரம் குறித்து அனைவரும் ஒன்றிணைந்து பேசுங்கள். இது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் நான் முன்வைக்கும் வேண்டுகோள்.

ஏனென்றால், இந்த அனர்த்தத்தின்போது வழக்குகளை பற்றி யோசிக்காதீர்கள். வழக்குகளை நிறுத்த வேண்டியதில்லை. ஆனால், அதற்கு மத்தியில், இந்த அனர்த்தத்தின்போது எதிர்க்கட்சியையும், நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் ஒன்றிணைக்குமாறு நான் ஜனாதிபதியிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால், எந்தவொரு அரசாங்கத்தாலும் இந்தச் சுமையைத் தாங்க முடியாது. எந்தவொரு அரசாங்கத்தாலும் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டவும் முடியாது. அதுமட்டுமின்றி, குறைந்தபட்சம் நாம் சர்வதேச நாணய நிதியத்தினரை (IMF) அழைத்து, அவர்களிடம் பேசி, குறிப்பாக கடனை மீளச் செலுத்துவதை மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடுவது குறித்துப் பேச வேண்டும். எனவே, இந்த இரண்டு மாற்று வழிகளில் ஒன்றையாவது நாம் செய்தேயாக வேண்டும்.

நான் வலியுறுத்துவததெல்லாம் இந்த பேரிடரின் போது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்பதைத்தான்.

நிச்சயமாக, முன்பு அமைதிப் பேச்சுவார்த்தை செயல்முறை இருந்தது, அப்போது நன்கொடையாளர் மாநாடும் கூட்டப்பட்டது. நான் சமாதான பேச்சுவார்த்தையாளராக நன்கொடையாளர் மாநாடுகளிலும் பங்கேற்றேன். ஒஸ்லோவிலும் நியூயோர்க்கிலும் நடந்த நன்கொடையாளர் மாநாட்டின் போது 4.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட இலக்கு வைத்தோம், கிட்டத்தட்ட 3 பில்லியன் உறுதியளிக்கப்பட்டது.

எனவே, இங்கு கொழும்பில் நாம் நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டியே ஆக வேண்டும்.

ஜனாதிபதி மீது சர்வதேசத்தின் நல்லெண்ணம் உள்ளது என்று நான் நம்புகிறேன். அவர் தொலைபேசியை எடுத்து, குறிப்பாக சமீபத்தில் அவர் விஜயம் செய்த நாடுகளின் சர்வதேசத் தலைவர்களுடன் பேசினால், அவர் மீதுள்ள அந்த நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி அவர்களுடன் பேசி, விரைவில் கொழும்பில் ஒரு நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும்.

ஓய்வுபெற்ற அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளையும் ஒன்றிணையுங்கள். ஏனென்றால், இது ஒரு தேசியப் பேரழிவு. இதை அரசியல் கோணத்தில் அணுகாதீர்கள். வேறு வழியில்லாமல் இந்தக் கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.

மேலும், நிச்சயமாக, தற்போதைய ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்ற அதிகாரிகளும் உள்ளனர் என்பதை நான் தயக்கத்துடன் கூறியேயாகவேண்டும்.

எனவே, ஓய்வுபெற்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் சிலர் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் அனுபவம் வாய்ந்த அவர்களை அழையுங்கள். நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர், ஓய்வுபெற்ற திறைசேரியின் துணைச் செயலாளர் பாயிஸ் மொஹிதீன் போன்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பலரை அழையுங்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வந்து, அரசாங்கத்திற்குத் தேவைப்படும் இந்த பெரும் தொகைப் பணத்தை திரட்ட உதவுவார்கள்.

நான் இந்தியா மற்றும் ஜப்பானை பரிந்துரைக்கக் காரணம் என்னவென்றால், அவை பல புவிசார் அரசியல் விவகாரங்களில் ஒன்றாகச் செயல்படுகின்றன. நிச்சயமாக, சீனா அவற்றுடன் ஈடுபடாது. எனவே, ஜனாதிபதி சீன அதிபர் ஜின்பிங்குடன் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும். ஜனாதிபதி புடினுடனும் தனிப்பட்ட முறையில் பேசுங்கள். காரியங்கள் நடக்கும். நாம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை எதிர்கொண்டுள்ள இந்தக் கடுமையான பின்னடைவிலிருந்து திருப்ப வேண்டிய நேரம் இது. இந்த நாடு எதிர்கொண்டுள்ள இந்தச் சூழ்நிலை, அதன் அளவு மற்றும் வீச்சு,பாரதூரம் என்பன முன்னெப்போதும் இல்லாதது.

எனவே, அரசாங்கம் உடனடியாகச் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பாவின் கவனம் உக்ரைன் மீதும் மற்ற இடங்களிலும் இருப்பதால், அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அரபு நாடுகளின் கவனம் காஸா மீதில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம்(UAE), இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஒன்றிணைந்து நமக்கு உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நிச்சயமாக, கத்தார் மற்றும் சவுதி அரேபியாவையும் அழைத்து, நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டச் சொல்லலாம். அது நிச்சயமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பில் நடக்க வேண்டும்.

ஜனாதிபதி அக்கறையுடன் முயற்சித்தால், அது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று நான் குறிப்பிட வேண்டும்.

வெள்ளம் நாடெங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மூதூர் மற்றும் கிண்ணியா நீரில் மூழ்கின. கன்னத்தோட்டையிலும், மல்வானையிலும் வேறு இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது.

ஆனால், கண்டியில் நடந்தது முன்னெப்போதும் இல்லாதது. முழு கண்டி மாவட்டத்தையும், குறிப்பாக கம்பளை நகர்ப் பகுதியையும் மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சிறப்புத் திட்டம் தேவை. அனைத்தும் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன, மக்கள் மிகவும் வறுமையில் வாடுகின்றனர்.

எனவே, உடனடியாகச் சில சீர்திருத்த நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும். நிலச்சரிவுகளை மட்டும் பார்த்தால், கண்டியின் ரம்புக்எல, விலானகம அக்குரணை பிரதேச செயலாளார் பிரிவில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 11 சடலங்கள் (ஜனாஸாக்கள்) மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சடலங்களை சேற்றுக்கு அடியில் அப்படியே புதையுண்டிருக்க குடும்பத்தினர் இணங்கியுள்ளதாக கூறப்பட்டது.

கம்பளை உடபலாத்த பகுதியிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது, அங்கேயும் பல சடலங்கள் மீட்கப்படவில்லை, 15க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் புதையுண்டுவிட்டன. கம்பளை உடபலாத்த ஹந்தபிம பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது, நான் கண்டியில் வசிக்கும் இடத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் தான் அது உள்ளது. அந்த நிலச்சரிவில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பல சடலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளன.

எனவே, இதுதான் உடபலாத்த ஹதபிம, மாவத்துற உடகம மற்றும் ரம்புக்எல ,விலான என்பவற்றின் நிலைமை. முழு கிராமமுமே அழிந்துவிட்டது. மக்கள் மீண்டும் வாழத் திரும்பிச் செல்ல முடியாது, எனவே மாற்று இடங்கள் அவர்களுக்குக் கண்டறியப்பட வேண்டும். இந்த மாற்று நிலங்களைத் தேடும்போது, காணிச் சீர்திருத்த ஆணைக்குழு(LRC) ஜனவசம, மற்றும் பெருந் தோட்டங்களில் உள்ள நிலங்களைப் பற்றிப் பார்க்க வேண்டும்.

ஆனால், எல்லாவற்றுக்கும் தேசியக் கட்டட ஆய்வு நிறுவனத்திடமிருந்து (NBRO) சான்றிதழ் தேவை. கட்டட ஆய்வு நிறுவனத்தில் போதிய அதிகாரிகள் இல்லை.

எனவே, அரசாங்கம் உடனடியாகச் செயல்பட்டு, நம்முடைய பொறியியல் பீடங்களில் உள்ள, குறிப்பாக பேராதனை, மொறட்டுவ, களனி, ருஹுணு ஆகிய பொறியியல் பீடங்களில் உள்ள நிபுணர்களை அழைத்து, அனைவரும் ஒன்றிணைந்து இந்த பணியில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் இதைச் செய்ய முடியாது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் அனாதைகளாகிவிட்டனர், அவர்களால் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது. வீடுகளுக்குச் செல்வதற்கு முன், ஒரு சில ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இப்போதிருக்கும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின்(NBRO) அதிகாரிகளால் அந்த அறிக்கையை தயாரித்துக் கொடுக்க முடியாது.

நான் தெல்தோட்டைப் பகுதிக்குச் சென்றேன். அங்கே பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தெல்தோட்டை நகருக்கு அருகில் உள்ள பியசேனபுரவில் மேலிருந்து மண்மேடு சரிந்து, தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அனுர டேனியல் மருத்துவமனைக்கு அருகில் உள்ள வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், பெரிய அளவில் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், மக்களால் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது. மக்கள் இன்னும் அந்த வீடுகளில் தான் இருக்கிறார்கள், வெளியேறிச் செல்ல வேறு இடமில்லை.

எனவே, குறிப்பாக, நாரங்ஹேன பட்டியகம எஸ்டேட்டிலும் கூட, அந்த லயன் அறைகளுக்குச் செல்லவே முடியாது. எனவே, மக்களின் அவல ஓலத்தைக் கேட்டுவிட்டு வந்தோம். அவர்களுக்கு ஒரு முடிவை, ஒரு பதிலைக் கொடுக்க நாம் உடனடியாக மாற்று இடங்களைத் தேட வேண்டும், அதற்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும்.

இப்போது கண்டிக்குச் செல்ல கலகெதரை வழியாக மட்டுமே வாய்ப்பு உள்ளது. கடுகண்ணாவ வீதி மூடப்பட்டுள்ளது. கலகெதரை வீதியிலும் பல இடங்களில் பாதை பெரிய அளவில் இடிந்து விழுந்துள்ளது. இப்போது ஒரே வழித் தடம் மட்டுமே உள்ளது.

எனவே, அந்தப் பாதையையும் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். அதைச் செய்யச் சிறப்பு அறிவுள்ளவர்கள் தேவை. இந்த பொறியியல் பீடங்களில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, ஒரு மாநாட்டை நடத்தி, இதைப் பற்றிப் பேசி, அவர்களின் சிறப்பு அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, அறிவுள்ளவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி, அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டிய ஒரு பெரிய பணி இது. எனவே, நிதி திரட்ட நாம் சர்வதேச நன்கொடை மாநாட்டை உடனடியாகக் கூட்ட வேண்டும். இதில் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன் என்றார்.

மீட்பு நடவடிக்கையில் அதிரடியாக இறங்கிய அமீரகத்தின் குழு!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான ஒருங்கிணைந்த உதவி மற்றும் மீட்புப் பணிகள்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)-ஓட்டமாவடி.

அண்மையில் இலங்கையைத் தாக்கிய டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளம், மிக மோசமான நிலச்சரிவுகள் ஆகியவை நாட்டின் பல பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கை பேரழிவின் தாக்கத்தைக் குறைக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உடனடியாக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

களத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழு:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அவசர நடவடிக்கையின் முக்கிய பகுதியாக, அபுதாபி குடிமைத் தற்காப்புப் பிரிவைச் சேர்ந்த நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் (USAR) குழுக்கள் அடங்கிய குழு, மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நிபுணத்துவம்: இந்தக் குழு அதிநவீன உபகரணங்கள், நீர் மீட்பில் நிபுணத்துவம் பெற்ற பிரிவுகள், மீட்புப் படகுகள், பயிற்சி பெற்ற K9 பிரிவுகள் (நாய்கள்) மற்றும் சவாலான சூழல்களுக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் குழுவின் திறன்கள், மிகக் கடினமான பகுதிகளில் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகின்றன.

  • ஆரம்ப நடவடிக்கைகள்: வந்தவுடன், குழுவினர் உடனடியாக கள நடவடிக்கைகளைத் தொடங்கி, நில அளவை செய்தல், சேதத்தை மதிப்பிடுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு அவசர ஆதரவை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொண்டனர்.

    கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச செயலகப் பகுதியில் உள்ள ரம்புக்-எல/விலனாகம என்ற பிரதேசத்திற்கு இந்தக் குழு சென்றடைந்தது. இது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில், மலை உச்சியில் அமைந்திருந்த வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு, 16-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து பள்ளத்தாக்குக்குள் அடித்துச் செல்லப்பட்டன.
  • மீட்பு நடவடிக்கை: நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரம்புக்-எல/விலனாகம போன்ற பகுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், இந்தக் குழு இடிபாடுகளுக்கு அடியிலிருந்தும் பள்ளத்தாக்கிலிருந்தும் 10 உடல்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது. இந்த முயற்சிகள், இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விமானப் போக்குவரத்து மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்:

இந்த அவசர உதவி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான நிவாரணக் குழுவால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

  • அவசர விநியோகம்: உலகிலேயே மிகப்பெரிய இராணுவ சரக்கு விமானமான ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் C-17A விமானங்கள் மூலமாக இதுவரை நான்கு தடவைகள் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மொத்தமாக 20 டன்களுக்கும் அதிகமான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    முக்கிய நிவாரணப் பொருட்கள்: நிவாரணப் பொருட்களில் பின்வருவன அடங்கும்:
  • தங்குமிடங்கள்: 48 தற்காலிக வீடுகள் மற்றும் கூடாரங்கள்.
  • உணவுப் பாதுகாப்பு: ஒரு குடும்பத்திற்கு 14 நாட்களுக்குப் போதுமான 2,592 உணவுப் பொதிகள்.
  • உபகரணங்கள்: மீட்புக் குழுவினருக்கான வாகனங்கள், மீட்புப் படகுகள் மற்றும் சவாலான நிலப்பரப்பில் பயணிக்க மோட்டார் சைக்கிள்கள் (motorbikes) போன்ற பயன்பாட்டு வாகனங்கள்.
  • பிற பொருட்கள்: மருந்துப் பொருட்கள், உடைகள், போர்வைகள் மற்றும் பாய்கள் (mattresses) உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்கள்.

இந்தச் சூழ்நிலைக்கு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வழங்கிய விரைவான மற்றும் அதிகளவிலான உதவிகளுக்காக பொதுமக்கள் சார்பில் ஆழமான பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சமூகத்தினரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய ஒன்றிணைந்துள்ளனர்.

நெருக்கடிகளின்போது நட்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ள உறுதியான மற்றும் நீடித்த அர்ப்பணிப்பை இந்தத் தலையீடு மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. இந்த உதவிகள் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் குறைக்கவும், மீட்பு மற்றும் ஸ்திரப்படுத்துதல் முயற்சிகளை விரைவுபடுத்தவும் உதவுகின்றன.

இலங்கை சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்டபோதும் ஐக்கிய அரபு அமீரகம் ஓடோடிவந்து உதவியது போன்று, இம்முறையும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. இலங்கை மக்களாக ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்களுக்கும், குடி மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளும், பிரார்த்தனைகளும்.

பாலத்தினை புனரமைக்கும் பணியை ஆரம்பித்த இந்திய இராணுவம்!

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவ பல நாடுகளும் முன்வந்துள்ளது.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட நாளிலிருந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய இராணுவங்கள் தொடர்ச்சியாக மீட்பு பணிகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் உள்ள பாலம் ஒன்று தாழ் இறங்கிதன் காரணமாக, முல்லைத்தீவு – கிளிநொச்சி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள குறித்த பாலத்தினை புனரமைக்கும் பணியை இன்று ஆரம்பித்துள்ளனர்.

இன்று பிற்கல் கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியல் குழு, புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.