அரசாங்கத்தின் அபிவிருத்தியை கரைச்சி பிரதேச சபை குறிப்பாக தவிசாளர் தடுப்பதாக தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் அபிவிருத்தியை மக்களுக்கு கிடைக்கவிடாது கரைச்சி பிரதேச சபை செயற்படுவதாக தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுயலாப அரசியல் நோக்கில் கிளிநொச்சியின் அபிவிருத்தியை தடுக்காதே, அதிகாரத்தால் மக்களை ஆள நினைக்காதே, இதுவரை காலமும் ஏமாற்றியது போதும், அப்பாவி மக்களுக்கு அநியாயம் செய்யாதே போன்ற சுலோகங்களையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து பேரணியாக பிரதேச சபை வரை சென்று பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நேரம் சபை தவிசாளர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் பிரதேச சபையின் செயலாளரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கரைச்சி பிரதேச சபை செயலாளர் தங்கபாண்டி ஞானராஜ் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கையளித்திருந்தனர்.
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகள், ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை வழங்குதல் மற்றும் உரிய பதவி உயர்வுகளை வழங்குதல் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் பின்புறமாக தோட்டத்தில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்ட நிலையில், அவர் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் வட்டவளை பொலிஸாருடன் ஹட்டன் தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 5.634 மில்லியன் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பின்னர் அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இந்தநிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றதிலிருந்து, நாட்டில் நேரடி வெளிநாட்டு முதலீடு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டில் 1.048 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெறப்பட்டதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இந்த முதலீடுகளில் 65%க்கும் அதிகமானவை முன்னணி உலகளாவிய முதலீட்டாளர்களால் செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மாத்திரம் 780 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை ஈர்த்துள்ளதாகவும், இவ்வருடத்திற்கான ஒரு பில்லியன் டொலர் இலக்கை அடையமுடியும் என நம்புவதாகவும் இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவினால் காலமானார்.
இன்று (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் சுகவீனமடைந்த நிலையில் கரந்தெனிய பொரலந்த வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட மஹீல் முனசிங்க, கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
47 வயதான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிராந்திய கலந்துரையாடல் மற்றும் சீன-இலங்கை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை 12வது Beijing Xiangshan Forumல் பாதுகாப்புச் செயலாளர்
சீனாவில் நடைபெறும் 12வது Beijing Xiangshan Forum உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு உரையாடல், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“ஒவ்வொரு நாட்டின் நியாயமான பாதுகாப்பு தேவைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார். பிராந்தியவாதத்தை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் மற்றும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை சீராக முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
12வது Beijing Xiangshan Forum 17 முதல் 19 (செப்டம்பர்) வரை பெய்ஜிங்கில் உள்ள பெய்ஜிங்கி சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. நான்காவது அமர்வில் “Building regional peace through dialog and consultation” என்ற தலைப்பில் இன்று (19) அவர் உரையாற்றினார்.
இந்த உயர்மட்ட பாதுகாப்பு கலந்துரையாடலுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்ததற்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்தார். இக்கலந்துரையாடல் ஆசிய-பசுபிக் மற்றும் அதற்கு அப்பால் கலந்துரையாடலை வளர்ப்பதற்கும் அமைதியை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது என்றும் கூறினார்.
அனைத்து நாடுகளின் நியாயமான பாதுகாப்பு தேவைகளை மதித்து, கலந்துரையாடல் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஜனாதிபதி Xi Jinping அவர்களை மேற்கோள் காட்டி, உண்மையான அமைதி, மோதல்கள் இல்லாததன் மூலம் மட்டுமல்ல, கலந்துரையாடல், புரிதல் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலமும் அடையப்படுகிறது என்று பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தை எடுத்துரைத்த அவர், இந்து சமுத்திரம் ஒரு அமைதியான பிராந்தியமாகவும், ஒத்துழைப்புக்குத் திறந்ததாகவும், மோதல்களிலிருந்து விடுபட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான நாட்டின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். “இலங்கை அமைதி மற்றும் ஒத்துழைப்பின் பாலமாக செயல்படத் தயாராக உள்ளது, கிழக்கு மற்றும் மேற்குக்கும் இடையே இணைப்பு, வர்த்தகம் மற்றும் கலாச்சார உரையாடலை எளிதாக்குகிறது” என்று அவர் கூறினார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்பை பாதுகாப்பு செயலாளர் மேலும் வலியுறுத்தினார், நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஏழு தசாப்த கால இருதரப்பு உறவுகளையம் அவர் நினைவு கூர்ந்தார். இலங்கையின் இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் சீனாவின் உறுதியான ஆதரவையும், இராணுவப் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அதன் பங்களிப்பையும் அவர் நினைவுபடுத்தினார்.
ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (21) சுப்பர் – 4 சுற்றில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே இந்த தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
அத்துடன் அன்றைய ஆட்டத்தின் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு, இந்திய அணி வீரர்கள் கைகுலுக்குவதை நிராகரித்தமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்திய அணி அவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் அணி அதிருப்தி வௌியிட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிலும் முறைப்பாடளித்திருந்தது.
பின்னர் அந்த சம்பவத்தை கண்டித்து ஐக்கிய அரபு இராச்சியம் அணியுடனான போட்டியின் போது மைதானத்திற்கு தாமதமாகவே பாகிஸ்தான் அணி வந்தது.
இதனால் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள நிலையில் போட்டிக்கு முன்னதாக இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பை பாகிஸ்தான் அணி புறக்கணித்துள்ளது.
இவ்வாறான சூழலில் போட்டியின் வெற்றி, தோல்வி ஒருபுறம் இருக்க, இரண்டு அணி வீரர்களும் இன்று கைகுலுக்குவார்களா என்பதையே கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
சமாதானத்திற்கான நடைப்பவனி ஒன்று இன்று கிளிநொச்சியில் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டது.
செல்வநாயகம் நினைவு அறைக்கட்டளையின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்களால் உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு நடைப்பவனி திட்டமிடப்பட்டது.
குறித்த நடைப்பயணம் உலக சமாதான தினத்தை முன்னிட்டு இன்றய தினம் காலை 9 மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து அமைதியாக நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடைப்பயணம் ஆரம்பமாகி கிளிநொச்சி பேருந்து நிலையம் வரை தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர்களால் பல்வேறுபட்ட சமாதான எண்ணக்கரு தாங்கிய பதாகைகள் ஏந்தி குறித்த நடைப்பயணம் மேற்கொள்ளபட்டது.
இவ் நடைப்பயணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத குருமார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) தாம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட உரையொன்றை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த முறைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தாம் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து திரும்பியதாகவும், கொழும்பு திரும்புவதற்கு முன்பு ஒரு இரவை அங்கேயே கழித்ததாகவும் குறிப்பிட்டதுடன் இந்த செயல்முறை முற்றிலும் உத்தியோகபூர்வ விஜயம் என்றும் அவர் கூறினார்.
தாம் அங்கு இருந்ததால் தமக்கு கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாது இருந்திருப்பினும் தாம் இங்கிலாந்திலேயே அன்றைய தினம் இருந்திருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.