நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பாராளுமன்ற கட்டடத்தொகுதியின் கொன்கிரீட் மேல்தளம் (Roof Terrace) மீது காணப்படும் மண் அகற்றப்பட்டு, திருத்தப் பணிகள் இந்நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது மாத்திரமன்றி, கூரைகளின் பீலிகள் (Roof Gutters),செப்புக் கதவு (Copper Door), பாராளுமன்ற வைத்திய நிலையம் (Parliament Medical Center), கழிவறைக் கட்டமைப்பு (Washrooms) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி அறை என்பவற்றிலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு அளவிலான திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்புக்கள் இணைப்புப் பொறியியல் திணைக்களத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருப்பினும், பாரிய அளவிலான திருத்த வேலைகள் தற்போதே முன்னெடுக்கப்படுகின்றன.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்.
கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயற்திட்டமொன்றை வகுத்து, கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கத்துடன், பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களை கல்வித் துறையில் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வ ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (13) காலை கல்வி அமைச்சு வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
ஒவ்வொரு அமைச்சருக்கும் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் உதவ ஒரு ஆலோசகர் அல்லது குழுவை நியமிக்க ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின்படி இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களாக
சங்கைக்குரிய மொரகந்தேகொட ஆரியவன்ச தேரர் – சிரேஷ்ட விரிவுரையாளர், ருஹுணு பல்கலைக்கழகம்
பேராசிரியர் காலிங்க டியூடர் சில்வா – ஓய்வுபெற்ற பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் ஷியாமணி ஹெட்டியாரச்சி – பேராசிரியர், மாற்றுத்திறனாளிகள் கல்விப் பிரிவு, மருத்துவ பீடம், களனி பல்கலைக்கழகம்
திரு. ஆனந்த கலப்பத்தி – ஆணையாளர், லான்செட் (Lancect) ஆணைக்குழு
கலாநிதி சங்கரபிள்ளை அறிவழகன் – புள்ளிவிபரவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வைத்தியர் சயூரி ருவன்மலி பெரேரா – மனநல மருத்துவ சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை மருத்துவ பீடம் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர்.
திரு. தம்மிக்க அழகப்பெரும – தலைவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
திரு. ரமிந்து பெரேரா – விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
திரு. ரத்நாயக்க கருணாசிறி – ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்
வைத்தியர். வை. எச். சஷிதர டி சில்வா – மருத்துவர்களுக்கான விளையாட்டு மருத்துவ உடற்தகுதி தேசிய பயிற்சித் திட்டத்தின் வளவாளர்
திரு. டி. ஜோன் குயின்டஸ் – ஓய்வுபெற்ற கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம்
திரு. டி. எம். பிரேமவர்தன – ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்
கலாநிதி ஜானக ஜயலத் – சிரேஷ்ட விரிவுரையாளர், தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
கலாநிதி வசந்த ஹேரத் – ஆசிய பசிபிக் முன்பராய அபிவிருத்திக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி.
ஆகியோர் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படுவது, பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரு திட்டமாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
கஞ்சா பயிர்ச்செய்கைக்கு ஏழு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
முதலீட்டுச் சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார்.
இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர்.
எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக்கு காரணமாக முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
முந்தைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகவுள்ளது.
இந்த திட்டத்தை ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கம் இத்திட்டத்தை அமுல்படுத்த முயன்ற போது தற்போதைய தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர், அதனைக் கேலி செய்து எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை அவரது சமூக ஊடக கணக்குகளில் காணப்பட்டது.
அது போன்ற சிறந்த நிலையில் இருந்த ஒருவர், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரான பின்னர், இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதானது வருந்தத்தக்கது.
கஞ்சாவை சட்டப்பூர்வ பொருளாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் காணப்பட்டாலும், உலகளாவிய ரீதியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சியானது, பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அறிஞர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
எனவே, இது கஞ்சா வியாபாரத்தின் இறுதி இலக்கை அடையப் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாயத் திட்டமாகும்.
புதிய அரசாங்கம் அந்த திட்டத்தின் ஒரு தரப்பாக மாறியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
சர்வதேச சந்தையில் கஞ்சா அதிகமாக காணப்படுகின்றது, எனினும் சர்வதேச ரீதியாக தேவை அதிகரிக்கவில்லை, சந்தையின் இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச ரீதியாக கஞ்சா சந்தை தற்போது வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியாது.
பொருளாதார நன்மைகள் என்று கூறும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் இது போன்ற முடிவுகளை எடுப்பதன் மூலம் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரித்து பல பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூற வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் அத்தகைய முடிவை எட்டியுள்ளது ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் உள்ளது.
குறிப்பாக, முந்தைய அரசாங்கங்கள் எடுத்த பல நடவடிக்கைகளை விமர்சித்து தடுத்து நிறுத்தும் தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் கொண்டு வந்த திட்டத்தை இவ்வளவு விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் வலுவான சந்தேகங்களை எழுப்புகிறது.
கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படின், இந்த முடிவு எதிர்காலத்தில் நமது நாட்டின் சுகாதாரம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்லும் ஒரு திட்டமாகும் என்பதை இறுதியாக நாம் வலியுறுத்துகின்றோம்.
மக்களின் நட்பு அரசாங்கமாக, இந்த முடிவை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்தியுள்ளது.
ஒரு கோடி 20 லட்சம் மக்களுக்கு சொந்தமான கடல் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணமாகவே இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் என்றும், நாங்கள் கடலுக்குச் சென்று எப்பொழுது கடலுக்கு இவர்கள் வருவார்கள், அவர்களை கொண்டு வந்து சிறையில் எப்பொழுது அடைப்போம் என்று நாம் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை என கடல் தொழில் அமைச்சர் இராமலிங்கம் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் காணி உறுதி வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய கடற்பரப்புக்குள் அத்துமறி உள் நுழைந்ததாக இலங்கை மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு எந்த விமோனமும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் இந்திய மீனவர்களது போராட்டமானது நியாயமற்றது என கடல் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களை நாங்கள் அடாவடித்தனமாக, அடிப்படை காரணங்கள் இன்றி பிடித்து சிறை வைக்கவில்லை. அவர்கள் இலங்கையினுடைய எல்லைக்குள் வருவதனால், இலங்கையினுடைய சட்டத்துக்கு அமைவாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
எமது தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற வடக்கு கிழக்கிலே வாழுகின்ற தமிழ் மீனவர்களுடைய ஜீவனோபாயத்தினை முற்றும் முழுதாக அளிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால்தான் இவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள் என்றும் இதுவா தொப்புள் கொடி உறவை பேணும் செயல் என்றும் கடல் தொழில் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீரி மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் ஆணித்தரமாக தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61 ஈ(ஆ) பிரிவின்படி, அரசியலமைப்பு பேரவை இந்த புதிய நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 37வது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய வரலாற்றில் இணைகிறார். இலங்கை பொலிஸில் பொலிஸ் கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று கட்டங்களையும் தாண்டி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு கற்பிட்டி திகலி பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது நாட்டிற்குள் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பெரும் தொகை கடத்தல் பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
(379) கிலோ கிராமை விட அதிகமான பீடி இலைகள், (6000) வெளிநாட்டு சிகரெட்டுகள், (2,812,00) மருந்து மாத்திரைகள் மற்றும் (1291) மருந்து ஊசிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, கற்பிட்டி திகலி பகுதியில், கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டை சோதனையிட்டபோதே குறித்த கடத்தல் பொருட்கள் மீற்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டியின் ஏத்தாலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீற்க்கப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்து மாத்திரைகள் மற்றும் மருந்து ஊசிகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கலற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வெற்று காசோலைகளை வழங்கி, பெற்ற பணத்தை திருப்பித் தராமல், 140 மில்லியன் ரூபாய் மோசடி செய்த தம்பதியினரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பொது மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வணிக நோக்கங்களுக்காக பணத்தை பெற்றுள்ளதுடன், அந்தப் பணத்தை திரும்பக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து, மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் வவுனியாவின் பண்டாரி குளத்தில் வசிக்கும் 47-49 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?
எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும், அவலமும், மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும் அதேவேளை, இஸ்ரேலிலும் மனிதாபிமானமுள்ள மக்கள் மத்தியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசின் மீது அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதுடன், மனிதக்கொலைகளால் உள்நாட்டிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார் நெதன்யாகு.
இம்மனிதகுல பேரவலத்தை நிறைவுக்கு கொண்டுவர வேண்டுமென உலகின் பல்வேறு அரபு, மேற்குல நாடுகள் முயற்சியின் பின்னணியில் சவூதி அரேபியாவும் அதன் தலைமையிலான அரபு உலகமும் இரு தேச தீர்வு (Two-State Solution) எனப்படும் வழி மூலம் இச்சிக்கலை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றது.
இரு தேச தீர்வு (Two-State Solution) என்ற கருத்தை முதன்முதலில் 1937ம் ஆண்டு பிரித்தானிய அரசின் பீல் ஆணைக்குழு முன்மொழிந்தது. இதனை முதல் சர்வதேசளவிலான அதிகாரபூர்வ திட்டமாக 1947ல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் (181) கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தரப்பால் இரு தேச தீர்வு (Two-State Solution) திட்டம் முன்வைக்கப்பட்டாலும் உள்ளக முரண்பாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில், சவூதி அரேபியாவின் இரு தேச தீர்வு (Two-State Solution) திட்டமான தற்போதைய யோசனை என்பது புதிதாகத்தோன்றியதல்ல. இது 2002ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அரபு சமாதான முன்மொழிவு (Arab Peace Initiative) என்பது தான் இத்திட்டத்தின் அடிப்படையாகும்.
சவூதி அரேபியா தலைமையிலான இந்த யோசனையானது 1967ம் ஆண்டு பாலஸ்தீன எல்லைகளுக்குள் கிழக்கு ஜெரூசலாமை தலைநகராகக்கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை ஏனைய நாடுகளின் ஆதரவுடன் நிறுவும் திட்டமாகும்.
தற்போது சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் மன்னரின் ஆலோசகராக முக்கிய பொறுப்புகளை ஏற்றுச் செயற்படும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உட்பட அரச உயர் மட்டத்தினர் பலஸ்தீனத்திற்கு தீர்வு வேண்டி இரு பக்கத்தினருடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொடர்ந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான சவூதியின் முயற்சியின் பலனாக இத்திட்டத்திற்கு ஐநா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இவையனைத்தும் அமைதியை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
இத்திட்டத்தை இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தலைமையில் கடுமையான வலதுசாரி அரசு, பலஸ்தீன அரசு ஒழுங்குபடுத்தப்படாதது ஹமாஸ் போன்ற இயக்கங்கள் பயங்கரவாதப் பின்னணியில் இருப்பதான காரணங்களை முன்வைத்து இரு தேச தீர்வைத் தள்ளிப்போடுகிறார்கள்.
மேலும், பலஸ்தீனம் தனி நாடாக உருவாவது தங்களது நாட்டுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலும் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
இவ்விடயத்தில், ஹமாஸ் அமைப்பின் நிலைமை மிகவும் மாறுபட்டது. அவர்கள் இஸ்ரேலின் நிலைப்பாட்டை முழுமையாக ஏற்கவில்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் பலஸ்தீனத் தேசம் உருவாகுவதை ஏற்கும் வகையில் சில சமரசங்களை முன்வைத்துள்ளனர்.
எனினும், இஸ்ரேலின் காசா மீதான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் கணிசமான பாதுகாப்பு நிபந்தனைகள், ஹமாஸை தீர்வுக்குத் தயாராக மறுக்கும் சூழ்நிலைக்கே இட்டுச்செல்கின்றன.
இஸ்ரேலானது, ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். காசா நெருங்க முடியாத பாதுகாப்பு பரப்பாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கின்றது. ஹமாஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்விவகாரத்தில் பலஸ்தீனத்தின் நிலைப்பாடாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பி.எல்.ஓ (PLO) அமைப்பு, இரு தேச தீர்வுக்கு ஆதரவளிக்கிறது.
அவர்கள் 1967 எல்லைகளை அடிப்படையாகக்கொண்டு, கிழக்கு ஜெரூசலேம் தலைநகராகும் ஒரு சுயாதீன தேசம் வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளனர். ஆனால், இஸ்ரேலின் குடியிருப்புப் போக்குகள், அமெரிக்காவின் அதிருப்தியான நடத்தை அவர்களின் நம்பிக்கையையே சீர்குலைக்கின்றன.
இவ்விடயத்தில் மேற்குலகத்தை நம்பலாமா?
கடந்த காலங்களில் நடைபெற்ற வரலாற்றுப்பிழைகள், இஸ்ரேலின் நலன்சார் நிலைப்பாடுகள், வணிக, பாதுகாப்பு நலன்கள் உள்ளிட்டவற்றால் மேற்குலகம் பலஸ்தீனத்திற்கு சீரான நீதியை வழங்குமென்பதில் பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர். “மேற்குலகம் கொடுக்கும் வாக்குறுதிகள், வார்த்தைகளாகவே மாறி விடக்கூடாது” என்ற கருத்தும் பலஸ்தீன ஆதரவாளர்களிடையே நிலவுகிறது.
இரு தேச தீர்வுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதகங்களாகப் பார்க்கும் போது, இரு தேச தீர்வு பலஸ்தீன மக்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்த சுதந்திரத்தை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
இஸ்லாமிய நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேம்படும்.
இஸ்ரேல் 1967ம் ஆண்டு எல்லைக்குள் திரும்ப வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான மோதல்கள் குறையலாம்.
இவ்வாறான பல நன்மைகள் இத்திட்டத்தினூடாக ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத் தீர்வு செயற்படுத்தப்பட முடியாமல் போனால், பலஸ்தீனர்கள் மற்றும் சுயாதீன பலஸ்தீனை விரும்பும் உலக மக்களும் மீண்டும் ஏமாற்றமடைவார்கள்.
இஸ்ரேலின் பாதுகாப்பு நிபந்தனைகள் பலஸ்தீனத்தின் முழுமையான சுதந்திரத்துக்கு தடையாக அமையலாம். ஹமாஸ் போன்ற அமைப்புகள் ஒதுக்கப்பட்டால், உள்நாட்டு முரண்பாடுகள் தீவிரமாகலாம் போன்ற இவ்வாறான பாதகங்களும் ஏற்படலாம்.
நீண்டு கொண்டு செல்லும் பலஸ்தீன, காசா போரையும் அதனால் ஏற்படும் அழிவுகளையும் தொடர்ந்தும் அனுமதிக்காது, ஊகங்கள், சந்தேகங்களை அடைப்படையாகக் கொண்டு இது சரி வருமா? இல்லையா? என்று விவாதம் செய்து காலத்தை கடத்தாது, இப்பிரச்சினைக்கு தீர்வாக இரு தேச தீர்வுத்திட்டத்தை சவூதி முன்வைத்திருப்பதை முன்மாதிரியான செயலாக பார்ப்பதோடு, இது தொடர்பான சவூதி அரேபியாவின் கடப்பாடு என்ன என்ற கேள்விகளுக்கு பதிலை பின்வருமாறு பார்க்கலாம்.
சவூதி அரேபியா என்ற நாடு, ஒரே நேரத்தில் இஸ்லாமிய உலகத்தின் தலைமை பொறுப்பையும், மேற்குலகத்துடனான நட்பு நிலையையும் சமநிலைப்படுத்தும் கடினமான பணியை மேற்கொண்டு வருகிறது.
புனித ஹஜ்/உம்ரா கடமைகளுக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் சவூதி உலகத்தில் நம்பிக்கை பெறும் நாடாகவே திகழ்கிறது.
இதற்கேற்ப, பலஸ்தீனத்திற்கு நீதி வழங்குவதில் முனைப்புடன் செயற்பட வேண்டியது சவூதியின் நீதி, சமாதானக் கடமை மட்டுமின்றி, மதப்பொறுப்பாகவும் இருக்கிறது.
பலஸ்தீனம் அதற்கான நியாயமான எல்லைகளோடு சுதந்திர நாடாக உருவாகும் வரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாடோடு, இஸ்ரேல் தொடர்ந்து செய்து வரும் அட்டூழியங்களைக் கண்டித்தும் அதற்கெதிராக செயற்பட்டும் வருகிறது.
எனவே, இதுவொரு நம்பிக்கையின் சந்தர்ப்பமாக மாறுமா? அல்லது மீண்டும் ஏமாற்றத்தை தருமா? என்பது உலகம் எப்படி பதிலளிக்கிறது என்பதில் தான் இருக்கிறது.
உலக நாடுகள் இவ்விடயத்தில் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ பகைத்துக்கொண்டு பலஸ்தீனத்திற்கு தீர்வு வழங்க வேண்டிய எவ்விதத் தேவைகளும் இல்லாத நிலையில், பலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு உலக நாடுகளில் வாழும் மக்களின் போராட்டங்களும் சற்று உலக நாடுகளை பலஸ்தீன விவகாரத்தில் திரும்பிப்பார்க்க வைத்தாலும், பலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வு என்று வரும் போதும் சவூதி அரேபியாவின் தீர்வை ஆதரிப்பதால் சவூதியுடனான நட்பும் அதன் பயன்களும் தங்களுக்குத்தேவை என்ற அடிப்படையில் பல நாடுகள் இன்று பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் மனநிலைக்கு வந்திருப்பதைப் பார்க்கலாம்.
இவ்விவகாரத்தில் சவூதி அரேபியா தனது பங்களிப்பை முழுமையாக வழங்கி வரும் இந்நேரத்தில், உலக நாடுகளும் நீதியுடனும் மனமுடைந்த பலஸ்தீன மக்களது குரலுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகின்றது. உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதோடு, அவற்றின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் கடப்பாடு சவூதி அரேபியாவிற்கு இருக்கிறது.
சவூதி அரேபியாவின் தீர்வுத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் அரபுலகிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் செல்வாக்குமிக்க பலமான நாடாக சவூதி மாறி விடுமென்பதால் சவூதியின் எதிரிகள் இத்தீர்வு வருவதை ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.
சவூதி அண்மையில் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களை நிறுத்த, சர்வதேச சமூகம் வலுவான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் பாலஸ்தீன மக்களைச் சூழ்ந்துள்ள மனிதப்பேரழிவை முடிவுக்கு கொண்டு வரலாம், ” 1967ம் ஆண்டு எல்லைகளுக்குள் கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை உருவாக்கும் இரு நாடு தீர்வே நீடித்த அமைதிக்கான ஒரே வழி” என உறுதியாகத் தெரிவித்துள்ளது.
இவற்றைத் தடுப்பதற்கு குழப்பங்களை ஏற்படுத்த தவறான கருத்துக்களையும் சந்தேகங்களையும் பரப்பும் வேலைகளை திட்டமிட்ட அடிப்படையில் எதிரிகள் செய்வார்கள். அண்மைக்காலமாக இவ்வாறான சில செயற்பாடுகளும் நடந்ததைப் பார்க்கலாம்.
எனவே, இரு தேச தீர்வு என்ற திட்டம் தொடர்பான விமர்சனங்கள், ஐயப்பாடுகள், ஊகங்களை விட்டுவிட்டு இறைவனிடம் இத்தீர்வு பலஸ்தீனத்திற்கான விடிவாக அமைய வேண்டுமென பிரார்த்தனை செய்வோம்.
நிச்சயமாக இறைவன் எமது பிரார்த்தனையை ஏற்று ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னராக கிடைத்த வெற்றி போல பலஸ்தீனத்திற்கான வெற்றியை வழங்கப்போதுமானவன்.
உலகின் சுகாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் சவூதி அரேபியா..!
எஸ். சினீஸ் கான்
உலக நாடுகள் தற்போது சுகாதார துறையை முன்னேற்றுவதை நோக்கி பயணிக்கின்றன. இந்நிலையில், சவூதி அரேபியா தனது பாரம்பரிய செயற்பாடுகள் மற்றும் பண்பாடுகளுக்கு இணையாக, நவீன மருத்துவ வசதிகள், ஆராய்ச்சித் தளங்கள் மற்றும் மருத்துவக் கல்வி வளங்களை மேம்படுத்தி, உலக சுகாதார மேடையில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.
சவூதி அரேபியா, தனது Vision 2030 எனும் தூர நோக்குத் திட்டத்தின் கீழ் பல்துறை முன்னேற்றங்களை அடைந்து வரும் முன்னோடி நாடாக திகழ்கிறது. சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற பல மாற்றங்களை இது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, இவ்வருடம் ஒக்டோபர் 27 முதல் 30 வரை, ரியாத்தில் உள்ள Exhibition and Convention Center-இல் 8வது Global Health Exhibition நடைபெறயிருக்கிறது.
“Invest in Health” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாபெரும் கண்காட்சி, உலகளாவிய சுகாதாரத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர்கள், உலகத் தர மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என அனைத்துத் துறைகளையும் ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் சிறப்பான வாய்ப்பு இதுவாகும்.
இந்தக் கண்காட்சியில், டெலிமெடிசின், டிஜிட்டல் ஹெல்த், தடுப்பு மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சிகிச்சை முறைகள், மருந்துத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய முன்னேற்றங்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட உள்ளன. உலக மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை மேம்படுத்தும் புதிய தீர்வுகள் இங்கே உருவாகும்.
இந்நிகழ்வு, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, மருத்துவ முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதன் மூலம், சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெறும் இலக்கிற்கு இது வலுவான அடித்தளமாக அமையும்.
இத்தகைய முயற்சிகள், மக்களின் நலனுக்காக சேவையாற்றும் சவூதி அரசின் வினைத்திறனை பிரதிபலிக்கின்றன. கட்டமைப்புப் புரட்சி, அறிவியல் முன்னேற்றம், மற்றும் மனிதநேயம் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றின் மேன்மைதான், இன்று சவூதி அரேபியாவை உலக சுகாதார மேடையில் ஒரு முன்னணி இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.